``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Vikatan June 23, 2025 02:48 PM

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதே நேரம், 'இங்கு விமான நிலையம் வேண்டாம்' என 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதோடு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் உள்பட பலக் கட்சித் தலைவர்கள் பரந்தூர் சென்று, போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனாலும், விமான நிலையம் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூர் சென்று போராட்டக்காரர்களை சந்தித்து உரையாற்றினார். அது, இந்த விவகாரத்தை இன்னும் கவனிக்க வைத்தது.

விமான நிலையம் அமையவுள்ள இடம்

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ``சென்னை மாநகரின் 2-வது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும், நலன்களும் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும், பொருளாதார மேம்பாடுகளுக்கும் உறுதுணையாக அமையும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பரந்தூர் விமான நிலையம்: `எதிர்க்கட்சியாக நாடகம்; ஆளும்கட்சியாக பச்சைத் துரோகம்..!’ - சாடும் சீமான்

இந்த சூழலில்தான், திருச்சி மாவட்டம், இனாம் புலியூரைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முயல்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். அன்னலட்சுமியின் தந்தை வீரமலையும், அவரது மகன் நல்லதம்பியும், அவரது ஊருக்கு அருகில் உள்ள கரூர் மாவட்டம், முதலைப்பட்டியில் இருக்கும் 200 ஏக்கர் பரப்பளவுள்ள முதலைப்பட்டி ஏரியை மீட்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தியதற்காக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டனர்.

விமான நிலையம் அமையவுள்ள இடம்

அந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வீரமலையின் மகள் அன்னலட்சுமி, மக்கள் பாதை அமைப்பு உதவியோடு, சமூக பிரச்னைகளுக்காக தந்தை வழியில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தான், பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது வழக்கு தொடுத்திருக்கிறார்.

இதுபற்றி, அன்னலட்சுமியிடமே பேசினோம்.

"13 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து, அங்கு விமான நிலையம் தேவைதானா?. ஏரியை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக போராடியதற்காக எனது தந்தையும், சகோதரரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கும், விமான நிலையம் என்ற பெயரில் 13 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதனால்தான், இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை காபந்து செய்வதற்காக சட்டப் போராட்டம் நடத்த முடிவெடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அபிடபிட் தாக்கல் செய்துள்ளேன். வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கும் தி.மு.க அரசு,  புது விமான நிலையம் கட்ட பரந்தூர் பகுதியை தேர்வு செய்திருப்பதில் பல சந்தேகங்களை உறுதி செய்கிறது. 

அன்னலட்சுமி

 தமிழ்நாட்டில் ஏற்கெனவே சென்னை மீனம்பாக்கம், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன. இதைத்தவிர, புதுச்சேரி, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்நாட்டு விமான நிலையங்கள் அமைந்துள்ளன. அதேபோல், ஒசூர், காரைக்கால், தஞ்சாவூர் மிலிட்டரி விமான நிலையம், நெய்வேலி, வேலூர் உள்ளிட்ட புதிதாக விமான நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

பரந்தூர் விமான நிலையம்; க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு... விவரம் என்ன?!

இப்படியாக, தமழ்நாட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான 12 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்து விட்டால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நெருக்கடி குறைந்துவிடும். மேலும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பயணிகள் பயன்பாடு 2024-25 ஆம் ஆண்டில் 2.24 கோடி. இதில், 75 சதவிகிதம் உள்நாட்டு போக்குவரத்தும், 25 சதவிகிதம் வெளிநாட்டு போக்குவரத்தும் அடங்கும்.

அதேபோல், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பொதுமக்கள் பயன்பாட்டின் எண்ணிக்கை வருடத்திற்கு 3.5 கோடியை எட்டினால் மட்டுமே துணை விமான நிலையம் குறித்து தேவை எழும். அப்படி, எட்டாத போது கட்டினால், எட்டும் வரை தமிழக அரசு தண்டம் கட்ட வேண்டும். எனவே, விவசாயத்தையும், நீர் நிலைகளையும் அழித்து பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டிய தேவை இல்லை.

விமான நிலையம் அமையவுள்ள இடம்

தவிர, இது மட்டுமின்றி கோவை சூலூர், தாம்பரம், தஞ்சாவூர், அரக்கோணம், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மிலிட்டரி விமான நிலையங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் தாண்டி, பரந்தூரில் 13 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களின் எதிர்ப்பை மீறி புதிதாக ஒரு விமான நிலையம் தேவையில்லை. இதை வலியுறுத்தி நாங்கள் அனுப்பிய கோரிக்கை மனுவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், இரண்டு கடிதம் வழியாக உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, சென்னை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்திற்கு அனுப்பினார். ஆனாலும் எந்த பலனும் இல்லை. அதனால்தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த அபிடபிட்டை தாக்கல் செய்துள்ளேன்" என்றார்.

பரந்தூர் விமான நிலையம்: வலுக்கும் மக்கள் போராட்டம் - கைகொடுக்குமா திமுக அரசின் சமாதான முயற்சி?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.