மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதேபோன்று மும்பை ஐ.ஐ.டிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். மும்பை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இருந்த அலுவலகத்திற்குள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி அங்கிருந்த பேராசிரியர் ஒருவர் கேட்டார். அவ்வாறு கேட்டவுடன் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே இது குறித்து செக்யூரிட்டிகள் உஷார்படுத்தப்பட்டனர். ஐ.ஐ.டி முழுவதும் அவரைத் தேடினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இறுதியாக வகுப்பு ஒன்றில் அமைதியாக இருந்து அந்த நபர் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அவரது பெயர் பிலால் என்றும், மங்களூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் ஐ.ஐ.டிக்கு ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்ள வந்துள்ளார்.
mumbai iitஅதன் பிறகு அவர் அங்கிருந்து செல்லவே இல்லை. ஜூன் 2ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரையும், பின்னர் 10ம் தேதியில் இருந்தும் ஐ.ஐ.டி வளாகத்தில் வசித்து வந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் தத்தா நலவாடே கூறுகையில்,''பிடிபட்ட நபரின் நடவடிக்கையில் எந்த வித சந்தேகமும் இல்லை. இன்ஜினீயரிங் கிளாஸில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அவர் ஐ.ஐ.டி வளாகத்தில் தங்கி இருந்து இன்ஜினீயரிங் கிளாஸ் நடக்கும்போது அதில் கலந்து கொண்டுள்ளார்''என்றார். எந்த வித அடையாள அட்டையும் இல்லாமல் மர்ம நபர் ஒருவர் ஐ.ஐ.டி வகுப்புகளில் கலந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.