ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். இவரது இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் ஸ்வாசிகா.
2009 ஆம் ஆண்டு வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வாசிகா. அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம் ஆகிய திரைப்படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்து பிரபலமானவர் ஸ்வாசிகா. இது மட்டுமில்லாமல் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்திருப்பார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் ஸ்வாசிகா. அந்த வகையில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். இந்த படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் விகடன் விருது வழங்கும் விழாவில் ஸ்வாசிகாவிற்கு லப்பர் பந்து படத்திற்காக விருது கிடைத்துள்ளது. அதே நிகழ்ச்சியில் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துக்கும் விருது கிடைத்தது. அந்த விருதை வாங்கிய பின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஸ்வாசிகாவை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், இந்த படத்தில் பணியாற்றிய எங்கள் எல்லோரையும் விட ஸ்வாசிகாவிற்கு கண்டிப்பாக விருது கிடைக்க வேண்டும் என்று நான் மனதார விரும்பினேன். அது ஏனென்றால் இந்த படத்திற்காக அவர் கடின உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். மேலும் ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாராக நடிக்க ஒருத்தர் கூட முன்வரவில்லை அந்த நேரத்தில் ஸ்வாசிகா தான் முன்வந்து நடித்துக் கொடுத்தார். அதனால் அவருக்கு கண்டிப்பாக விருது கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அவருக்கு விருது அளித்த விகடனுக்கு நன்றி என்று பேசி இருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.