சுங்க வரி விதிகளின் கீழ், சுங்க வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத பல அரசியலமைப்பு பதவிகள் உள்ளன. இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் மக்களவை சபாநாயகர் போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவி வகிப்பவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர், முதலமைச்சர், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.), சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் இந்த வசதி வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த விலக்கு பொதுவாக அந்தந்த மாநிலப் பகுதிக்கு மட்டுமே பொருந்தும். இதற்காக செல்லுபடியாகும் அடையாள அட்டை அல்லது பாஸ் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு கிடைக்கும்.
சுங்க கட்டண விதிகளின் கீழ், சில மூத்த நிர்வாக அதிகாரிகளும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்திய அரசின் செயலாளர், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலாளர், ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தலைவர்கள், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற செயலாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கு பெரும்பாலும் அவர்களின் அதிகார வரம்பிற்குள் பொருந்தும். அவர்கள் தங்கள் பணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சலுகையைப் பயன்படுத்த முடியும்.
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல் துறையின் அதிகாரிகளுக்கும் சுங்க கட்டண சலுகை கிடைக்கும். அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் பணியில் இருந்து சீருடையில் இருக்க வேண்டும். அவசரகால நடவடிக்கைகளை சீராக நடத்துவதற்கும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் இலவச சுங்க கட்டண வசதி கிடைக்கும். மேலும், ஆய்வுப் பணியில் உள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரிகளுக்கும் இந்த விலக்கு கிடைக்கும். சாலைகளின் தரம் மற்றும் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க இந்த அதிகாரிகள் பெரும்பாலும் நாடு முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது.
ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படை மற்றும் அமரர் ஊர்தி வாகனங்கள் போன்ற அவசர சேவைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட இயந்திர வாகனங்களும் இந்தியாவில் சுங்க வரி விலக்கின் கீழ் வருகின்றன. இருப்பினும், இதற்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
சில நேரங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளூர்வாசிகளுக்கு வருடாந்திர பாஸையும் வழங்குகின்றன. இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை விரைவில் நாடு முழுவதும் வருடாந்திர ஃபாஸ்டாக் பாஸ் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.