கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனவும், இதற்கான செயல்திட்டத்தை அறநிலையத்துறை வகுக்க வேண்டும் என்றும் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழா குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கோவையை சேர்ந்த சந்திகேஸ்வரர் சேவை அறக்கட்டளையின் தலைவர் சுரேஷ்பாபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழ் சைவ வழிபாட்டில் பட்டம் பெற்று, கடந்த 20 ஆண்டுகளாக தமிழில் வேள்வி நடத்தி வருகிறேன். திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற 7-ந்் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது தமிழில் வேள்வி குண்டங்களை நடத்த எனக்கு அனுமதி அளிக்க வேண்டும். அகராதிகள், திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழ் சாஸ்திரங்களில் இருந்து எடுத்த தமிழ் மந்திரங்கள் உள்ளன. சமஸ்கிருதத்துக்கு சமமாக தமிழுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
எனவே, திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். விமான கலசம், கருவறைகளில தமிழில் வேத மந்திரங்களை பாடுவதற்கு தமிழ் வேள்வி ஆசிரியர்களை அனுமதிக்கும்படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பரிசீலனை செய்து, அவர் வேள்வி குண்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, தமிழில் வேள்வி செய்ய அனுமதிப்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும் வருங்காலங்களில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் கும்பாபிஷேகங்களை தமிழில் நடத்தும் வகையில், தமிழ் மந்திரங்கள் உச்சரிப்பு, வேள்வி குண்ட நிகழ்ச்சிகளை தமிழில் நடத்துவதற்கான செயல் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் வகுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது