தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரண்டும் ஆழமான கட்டமைப்பு உள்ள கட்சிகள் என்றும், இந்த இரண்டு கட்சிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்துவது என்பது விஜய்க்கு ஒரு பெரிய ‘ப்ராசஸ்’ என்றும், அதை வீழ்த்துவதற்கு அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்று மருது அழகுராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், தி.மு.க.வை ஆதரிப்பவர்கள் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் அனைவரும் பல்வேறு வகையில் பிரிந்து இருக்கிறார்கள். “நூற்றுக்கு 35 மார்க் வாங்கினாலே தி.மு.க. பாஸாகிவிடும். ஆனால், மீதமுள்ள 65 மார்க்கை நான்கு பேர் பிரித்து வாங்கினால், எல்லோருமே ஃபெயில் ஆகிவிடுவார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார். எனவே, தி.மு.க.வுக்கு எதிராக ஒரே அணியாக மாறி மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரம் செய்தால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்றும், இல்லாவிட்டால் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜயைப் பொறுத்தவரை அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி உள்ளது, வரவேற்பு உள்ளது. ஆனால், அவர் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகளை வீழ்த்துவதற்கு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். குறிப்பாக, களத்தில் இறங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அ.தி.மு.க.வும் கூட்டணி உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. ஆனால், விஜய் இன்னும் எந்த விதமான முன்னெடுப்பும் எடுக்காமல் உள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் களமிறங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது வரை அவர் களத்தில் இறங்கவில்லை. ஒருவேளை அவர் களத்தில் இறங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தால் நிலைமை மாறலாம் என்றும் மருது அழகுராஜ் தெரிவித்தார்.
“தமிழகம் முழுவதும் நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்,” என்றும், “விஜய்க்கு இருக்கும் ஆதரவை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அவர் ஒரே நேரத்தில் 73 வருட தி.மு.க.வையும், 53 வருட அ.தி.மு.க.வையும் எதிர்ப்பது என்பது சவாலானது என்றும், அதற்கு அவர் இன்னும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றும் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
மொத்தத்தில், விஜய்க்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் அவர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், மக்களை சந்திக்க வேண்டும், மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், மக்களோடு மக்களாக இருக்க வேண்டும், ஊர்வலங்கள், போராட்டங்கள், பேரணிகள், ரோட் ஷோ என அனைத்து விதமான தேர்தல் பிரச்சாரங்களை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே முதல் தேர்தலில் ஓரளவுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த தகவல் அனைத்தும் விஜய்க்கு தெரியாமல் இருக்காது, கண்டிப்பாக அவர் விரைவில் களத்தில் இறங்குவார், மக்களை சந்திப்பார், வெற்றியும் பெறுவார் என்று தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் கமெண்ட்டுகளாகப் பதிவு செய்து வருகின்றனர்.