சாம்ராஜ்நகர்: 5 புலிகள் மர்மமாக இறந்த சம்பவத்தில் மூவர் கைது - என்ன நடந்தது?
BBC Tamil June 29, 2025 02:48 AM
BBC நாகராஜூ, கோனப்பா, மாதராஜூ

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஐந்து புலிகள் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கும் புலிகளை பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கில் இது திட்டமிடப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. புலிகள் இறப்பு தொடர்பாக வனத்துறையும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வந்தது.

காட்டுக்குள் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை புலிகள் அடித்து சாப்பிட்டுள்ளன. அந்த மாட்டின் உரிமையாளர் புலியின் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக புலிகள் உண்டது போக மீதி இருந்த மாட்டு இறைச்சியில் விஷத்தைக் கலந்துள்ளார் என சந்தேகப்பட்டனர்.

மீண்டும் விஷம் கலந்த மாட்டின் இறைச்சியை உண்ட புலிகள், 300 அடி சுற்றளவுக்குள் மயங்கி விழுந்து இறந்துள்ளன என்பதை முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மாரி அணை வனப்பகுதி ஒட்டி அமைந்திருக்கும் கல்மாத்தூர், ஹூக்கியம், கொப்பம், ஜல்லிபாளையம், மின்னியம் போன்ற ஊர்களில் மாடு மேய்க்கும் கிராமப் பகுதி மக்கள்தான் மாட்டிறைச்சியில் விஷம் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.

இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் குழு, ஐந்து புலிகளுக்கு அருகில் இறந்து கிடந்த பசு மாட்டின் இறைச்சியை ஆய்வு செய்தனர். அதில் 'போரேட்' என்ற பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருந்ததை உறுதி செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் விஷம் கலந்த பசுவின் உரிமையாளர் கொப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோனப்பா என்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசரணையில், "அந்த காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை, புலிகள் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. கால்நடைகளை வேட்டையாடும் புலியைக் கொன்று விட்டால் காட்டுக்குள், கால்நடைகள் பாதுகாப்பாக மேய்ச்சலுக்குச் சென்று வரும் என்ற நம்பிக்கையில், இறந்து போன மாட்டின் இறைச்சியில் விஷம் வைத்தோம்" என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

கொப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவன்னகவுடா என்பவரின் மகன் மாதராஜூவும் (29) கொப்பம் அருகிலுள்ள கல்லப்பா தொட்டி பகுதியைச் சேர்ந்த பூஜாரி கவுடா மகன் நாகராஜுவும் விஷம் வாங்கி வந்து, புலி அடித்து உண்டது போக மீதமிருந்தமாட்டு இறைச்சியின் மீது தெளிந்ததாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கோனப்பா, மாதராஜூ, நாகராஜூ மூவரையும், கர்நாடக போலீசாரின் உதவியுடன் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். எங்கிருந்து விஷம் வாங்கி வந்துள்ளனர், வேறு யாருக்கும் இது தொடர்புள்ளதா...? என்பது குறித்து மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BBC என்ன நடந்தது?

தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது.

இது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், பி.ஜி.பாளையம், அனூர், கொள்ளேகால் என ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஹூக்கியம் வனச்சரகம். இங்குள்ள மின்னியம் காட்டுப் பகுதியில், மாரி அணை கேம்ப் என்ற இடம் உள்ளது.

இந்த இடத்திலுள்ள ஒரு மாட்டுப் பட்டியின் அருகில் இன்று காலை ஐந்து புலிகள் உயிரிழந்து கிடப்பதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து, ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், மலை மாதேஸ்வரா வனக் கோட்ட துணை வனப் பாதுகாவலர் சக்கரபாணி தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்து கிடந்த ஐந்து புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.

  • திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டன் போர் விமானம் - இதுவரை கிடைத்த முக்கிய தகவல்கள்
  • இரானின் முதல் உச்ச தலைவர் காமனெயி மீது 'இந்திய ஏஜென்ட்' என முத்திரை குத்தப்பட்டதன் பின்னணி
மூன்று வயது குட்டிகள் Getty Images சித்தரிப்புப் படம்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், "இறந்துபோன தாய்ப் புலிக்கு 15 வயது இருக்கலாம். அதன் குட்டிகளுக்கு இரண்டு முதல் மூன்று வயதுக்குள் இருக்கும். இன்னும் சில நாள்களில் தாய்ப் புலியை விட்டு குட்டிகள், தனித்து வாழும் நிலையை அடையும் வயதில் இருந்தன.

ஐந்து புலிகளும் 300 மீட்டர் சுற்றளவுக்குள் உயிரிழந்து கிடந்தன. அவை இறந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம். ஐந்து புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. முதல் கட்ட விசாரணையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நாளை காலை கால்நடை மருத்துவர் குழுவைக் கொண்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அதற்குப் பிறகுதான், புலிகள் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரிய வரும்" என்றார்.

இந்திய அளவில் காட்டுயிர் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விரும்பிகள் மத்தியில், ஐந்து புலிகள் உயிரிழந்த செய்தி மிகப்பெரிய வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலய வனப்பகுதியில் உள்ள ஹூக்கியம் வனச்சரக எல்லையில் ஒரு தாய்ப் புலி மற்றும் மூன்று குட்டிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனையான செய்தியாகும். கர்நாடக அரசு, இதை மிகவும் தீவிர இழப்பாகக் கருதியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

  • புலியும் சிறுத்தையும் மனிதரை உண்ணும் ஆட்கொல்லியாக எப்போது மாறும்?
  • குஜராத்: கால்நடைக்கு தீவனம் சேகரிக்கச் சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்
இந்திரா காந்தி தொடங்கி வைத்த புலிகள் பாதுகாப்பு திட்டம் Getty Images புலிகள் அதிகமாக வாழும் காடு வளம் கொண்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் பாதுகாப்புக்காக ப்ராஜெக்ட் டைகர் (Project Tiger) எனும் திட்டத்தை 1973இல் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் புலிகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில், கர்நாடக மாநிலம், 563 புலிகளுடன் நாட்டில் 2வது இடத்தில் உள்ளது.

"புலிகள் பாதுகாப்பிற்குப் பெயர் பெற்ற மாநிலத்தில், ஒரே நாளில் ஐந்து புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கர்நாடக மாநில முதன்மை வனப்பாதுகாவலர் சுபாஷ் கே. மல்கேடே தலைமையில் உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "வன ஊழியர்களின் அலட்சியம் அல்லது மின்சாரம் தாக்கியதாலோ, விஷம் கொடுத்தோ மரணம் ஏற்பட்டு இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது.

  • இஸ்ரேல் - இரான் இடையிலான மோதல் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியை பாதிப்பது ஏன்?
  • பாம்பு கடித்த ஒருவரை காப்பாற்ற உடனே செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்
'புலிகள் - வன வளத்தின் குறியீடு' Getty Images இந்திய அளவில், கர்நாடகா மாநிலம் 563 புலிகளுடன் 2வது இடத்தில் உள்ளது

தமிழ்நாட்டில் காட்டுயிர்களின் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்து வரும் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ், "தாய்ப் புலியோடு சேர்ந்து மூன்று குட்டிகளும் உயிரிழந்ததைப் பார்க்கும்போது, இந்த ஐந்து புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது," என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய காளிதாஸ், "புலிகள் அதிகமாக வாழும் காடு வளமானது எனப் புரிந்துகொள்ளலாம். ஒரு புலி வாழும் காடு என்றால், அங்கே 500 மான்கள் வரை வாழும். 500 மான்கள் வாழும் இடத்தில், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மற்ற விலங்குகள், பறவைகள் வாழும். மரங்கள், செடி, கொடி, புற்கள் செழிப்புடன் வளரும். ஒரு புலி, ஒரு மானை, ஒரே முயற்சியில் வேட்டையாடி உண்ண முடியாது. குறைந்தது 20 முறை முயற்சி செய்துதான், அது தன் இரையை வேட்டையாடி உண்ணும்" என்று விளக்கினார் காளிதாஸ்.

மேலும், "இந்தியாவில் சட்டவிரோத வேட்டையால் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையை விடவும், விஷம் வைத்துக் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காட்டின் எல்லையோரப் பகுதிகளில், கால்நடைகளை வளர்க்கும் எளிய மக்கள், தங்கள் மாடுகளைப் புலிகள், சிறுத்தைகள் அடித்துச் சாப்பிட்டு விடுவதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் ஆத்திரத்தின் விளைவாக, இறைச்சியில் விஷத்தைக் கலக்கும் செயலில் ஈடுபடுவது நடக்கிறது" என்று கூறுகிறார்.

ஒரு புலி, தான் அடித்துச் சாப்பிடும் உணவைக் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடும் வழக்கம் கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டும் காளிதாஸ், "இந்த நடைமுறையைத் தெரிந்துகொள்ளும் சிலர், தனது கால்நடையைக் கொன்ற புலியை அல்லது சிறுத்தையைப் பழிவாங்கும் எண்ணத்தில், அது மிச்சம் வைத்துள்ள இறைச்சியில் விஷம் கலந்து விடுகின்றனர். இந்தியாவில் நிகழும் இயற்கைக்கு மாறான புலிகள் இறப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது," என்று கூறினார்.

மேலும், காடுகளைப் பாதுகாப்பதில் வனத்துறை முற்று முழுதாகச் சுயமாகச் செயல்பட்டுவிட முடியாது எனக் கூறிய காளிதாஸ், காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே இதற்கான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

அதோடு, "கால்நடைகளை வளர்க்கும் ஒருவருக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி விட்டால், அதற்கு அரசு இழப்பீடு வழங்கும் என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று விளக்கினார்.

  • ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
  • அறிமுகமில்லாத புதிய நபர்களுடன் எளிதில் பேசிப் பழக உதவும் 5 வழிகள்
புலிகள் வேட்டையாடிய கால்நடைகளுக்கான இழப்பீடு Getty Images

புலிகள் மற்றும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், "காடுகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு ஆயிரம் முதல் 3,000 வரையும், எருமைகளுக்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், மாடுகளுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும் வனத்துறையால் இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காட்டுயிர்களால் வேட்டையாடப்பட்ட கால்நடைகள் குறித்த தகவல்கள் கிடைத்ததும், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்யப்படும். அப்படித்தான் அதன் வயது முடிவு செய்யப்படும். பிறகு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வைத்து, மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைத்து, நிதி கையிருப்பு இருந்தால் உடனடியாக கிளைம் வழங்கப்படும். நிதி இல்லையெனில், அடுத்த மூன்று மாதங்களில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்நடைக்கு இழப்பீடு வழங்கப்படும்" என்று இழப்பீடு வழங்கப்படும் செயல்முறையை விளக்கினார்.

ஓய்வு பெற்ற கர்நாடக மாநில உதவி வனக்கோட்ட அலுவலர் அங்குராஜ் பேசும்போது, "கர்நாடக மாநில காப்புக் காடுகளின் எல்லைக்குள் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு கொடுப்பது இல்லை. ஊர் எல்லையில் உள்ள காடுகளில், காட்டுயிர்களால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்குகிறது" என்றார்.

மேலும், "மாநில அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இதுபோன்ற இழப்புகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வைக்கும். அதில் போதிய நிதி இருந்தால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். நிதி இல்லையெனில், சீனியாரிட்டி அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களிலோ அல்லது ஆறு மாதங்களிலோ இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறிய அவர், சில நேரங்களில், ஓர் ஆண்டு கடந்தும்கூட இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,682 புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் அதிகமுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். 2022ஆம் ஆண்டு, புள்ளி விவரங்களின்படி, மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 560 புலிகளுடன் மூன்றாவது இடத்தில் சத்தீஸ்கரும் உள்ளன. தமிழ்நாட்டின் காடுகளில் 264 புலிகள் மட்டுமே வாழ்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.