மாம்பழ விலை வீழ்ச்சி – தமிழக விவசாயிகள் தவிப்பு, பின்னணியில் ஆலை அதிபர்களா?
BBC Tamil June 29, 2025 02:48 AM
Getty Images சித்தரிப்புப் படம்

மாம்பழ விலை வீழ்ச்சியால் தமிழக மா விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த விலை வீழ்ச்சியின் பின்னணியில் மாங்கூழ் ஆலை அதிபர்களின் கூட்டணி இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆலை அதிபர்கள் அதை மறுக்கின்றனர். இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் ரீதியான மோதலும் வலுத்து வருகிறது.

தேசிய அளவில் மா உற்பத்தியில் தமிழகம் ஆறாமிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் சுமார் 360774 ஏக்கர் பரப்பளவில் மா பயிரிடப்படுவதாகவும், 9 லட்சத்து 49 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு மாம்பழம் உற்பத்தி நடப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடிதம் தெரிவிக்கிறது.

மாநிலம் முழுவதும் பரவலாக மா விவசாயம் நடந்தாலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களே இதில் முன்னணி வகிக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 98,842 ஏக்கர் பரப்பளவில் மா பயிரிடப்படுவதாக வேளாண்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஏக்கருக்கு 70 முதல் 80 மரங்கள் வீதம் மாவட்டத்தில் ஒரு கோடி மா மரங்கள் இருப்பதாகச் சொல்கிறார், கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் செளந்தரராஜன்.

கிலோ 5 ரூபாய்

இப்போது மாங்காய் சந்தையில் கிலோ 5 ரூபாய்க்கு மட்டுமே விலை போவதாக கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மா விவசாயிகளும் ஒரே கருத்தைத் தெரிவிக்கின்றனர். இதனால் கடும் இழப்புகளைச் சந்திப்பதாக கூறுகின்றனர்

வழக்கமாக, சித்திரையில் கேரளாவில் மாம்பழ அறுவடை துவங்கி, தமிழகத்தில் ஆடி இறுதியில் முடிவடையும். பருவம் துவங்கும்போது, முதலில் கடைகளுக்கு மாம்பழம் அனுப்பப்படும். பழங்கள் வரத்து அதிகரிக்கும்போது மாம்பழக்கூழ் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும்.

இந்த ஆண்டில் இந்தளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதற்கு மா விளைச்சல் அதிகமானதும் காரணமென்று விவசாயிகள் கூறுகின்றனர்.

  • போதைப் பொருள் சர்ச்சையும் திரையுலகமும்: தமிழ் திரைத்துறையில் என்ன நிலவரம்?
  • டிஜிபின் என்றால் என்ன? அஞ்சல் குறியீடுகளுக்கு மாற்றாக வரப் போகிறதா?
BBC ''மாங்கூழ் ஆலை அதிபர்களின் கூட்டணிதான் காரணம்!'

கிருஷ்ணகிரி சுற்றுப்பகுதிகளில் உள்ள 43 மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு, விவசாயிகளைப் புறக்கணிப்பதாகச் சொல்கிறார் சேலம் மாவட்ட உழவர் கூட்டமைப்பின் தலைவர் அபிநவம் ஜெயராமன்.

''பொதுவாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மா உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஆண்டும் அப்படித்தான் விளைச்சல் அதிகரித்துள்ளது. உற்பத்தியாகும் பழங்களில் 80 சதவிகிதத்தை மாம்பழக்கூழ் ஆலை உரிமையாளர்கள் கொள்முதல் செய்வார்கள். இப்போது கூட்டாகச் சேர்ந்து கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். ஒவ்வொரு ஆலையிலும் 50 வண்டிகள் நிற்கின்றன. 3, 4 நாட்களுக்குப் பின்பே காய் இறக்கப்படுகிறது. டன்னுக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைப்பதே அரிதாகவுள்ளது'' என்று பிபிசி தமிழிடம் விவரித்தார் ஜெயராமன்.

  • அபிநந்தனை சிறை பிடித்த பாகிஸ்தான் ராணுவ மேஜர் மரணம் - என்ன நடந்தது?
  • 'இரான் சிறப்பாக செயல்பட்டது' - இஸ்ரேல் உடனான மோதல் பற்றி டிரம்ப் கருத்து
BBC காய் முதிர்வுக்கு முன்பாகவே காய்களை அனுப்ப ஆலை உரிமையாளர்கள் நெருக்கடி கொடுப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்

விலை வீழ்ச்சியின் பின்னணியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளருமான மதியழகன் இருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இவர் மாம்பழக்கூழ் ஆலை அதிபர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டிலும் விலை தொடர்பாக நடக்கும் முத்தரப்புக் கூட்டத்துக்கு பெரிய ஆலை உரிமையாளர்கள் வரமாட்டார்கள் என்று கூறும் விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள், சிறிய ஆலை அதிபர்களால் முடிவெடுக்க முடியாது என்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சௌந்தரராஜன் இந்த விவகாரம் பற்றி பேசுகையில், ''இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்ததால், அனைத்து ஆலை அதிபர்களும் வரவேண்டுமென்று ஆட்சியர் அறிவுறுத்தியும் முத்தரப்பு கூட்டத்துக்கு மதியழகன் வரவில்லை. அவர் அண்ணன் உதயகுமார் வந்தார். விவசாயிகள் கிலோவுக்கு 15 ரூபாய் விலை கேட்டோம். அவர் 12 ரூபாய் தருவதாகவும் மே 10 லிருந்து கொள்முதல் செய்வதாகவும் கூறினார். ஆனால், பெங்களூரா ரக மாம்பழங்களை கிலோ ரூ.10லிருந்து ரூ.5க்குள்தான் வாங்குகின்றனர். ஒரு டன் மாங்காயைப் பறித்து ஆலைக்குக் கொண்டுவரவே ரூ.3,500 செலவாகிறது. ஒரு டன் பழத்துக்கு ரூ.1500 கிடைத்தால் ஒரு விவசாயி எப்படி விவசாயம் செய்ய முடியும்.'' என்கிறார்.

Soundararajan "ஒரு டன் மாங்காயைப் பறித்து ஆலைக்குக் கொண்டுவரவே ரூ.3,500 செலவாகிறது" - சௌந்தரராஜன்
  • அமெரிக்காவில் பல டன் இந்திய மாம்பழங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டது ஏன்? என்ன நடந்தது?
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
  • பேரரசர் அக்பரை பித்து பிடிக்க வைத்த மாம்பழம் - வரலாற்றில் என்னவெல்லாம் செய்தது?
  • மாம்பழம்: செயற்கையாகப் பழுக்க வைக்கும் பழத்தைக் கண்டறியும் வழிகளும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும்

கிலோவுக்கு ரூ.12 விலை கொடுக்க மாங்கூழ் ஆலை உரிமையாளர்கள் சொன்னதை ஒப்புக்கொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா, இப்போது வெளிநாட்டு ஏற்றுமதி குறைந்துவிட்டதால் பழைய ஸ்டாக் இருப்பதாகக் கூறி அந்த விலையைக் கொடுக்க முடியவில்லை என்று ஆலை அதிபர்கள் கூறுவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த விலை வீழ்ச்சி விவகாரம், விவசாயிகள், மாங்கூழ் அதிபர்களிடையிலான மோதலாக மட்டுமின்றி, அரசியல்ரீதியான மோதலாகவும் உருமாறியுள்ளது.

மா விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஜூன் 20 அன்று கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாம்பழத்துக்கு கிலோவுக்கு ரூ.13 விலை தரவேண்டும்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்; மாங்கூழ் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டன.

நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு வழங்குவது போல, மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று, மாம்பழங்களை மாங்கூழ் ஆலைகளுக்கு கொள்முதல் செய்வதையும், டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தார்.

கர்நாடகாவில் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், டன்னுக்கு ரூ.4,000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் கூட்டாக முடிவு செய்ததை வரவேற்றிருந்த அவர், தமிழக அரசு எதுவும் செய்யாததால் மாம்பழங்களை மீன்களுக்கு உணவாகவும் வீதியிலும் கொட்ட வேண்டிய அவலநிலை தமிழக மா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

  • அரபு போரில் இஸ்ரேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானி
  • சென்னை: காவல் நிலைய மாடியிலிருந்து குதித்து தப்ப முயன்ற கைதி உயிரிழப்பு - எஸ்ஐ சஸ்பெண்ட்
BIPIN TANKARIA/ BBC முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

விலை வீழ்ச்சி பிரச்னை குறித்து கருத்து கேட்க, தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண்துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் ஆகியோரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, இருவரிடமும் பதில் பெற முடியவில்லை.

இந்நிலையில், மா விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென்று பிரதமர் மோதி, மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகானுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

''தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் மா விளைச்சல் அதிகரித்துள்ளது. மாங்கூழ் நிறுவனங்கள் கொள்முதலை குறைத்துவிட்டதால் கிலோவுக்கு ரூ.5 என விலை கிடைக்கிறது. ஆந்திரா, கர்நாடகா வணிகர்களும் தமிழ்நாட்டு மாம்பழங்களை வாங்குவதைத் தவிர்த்துவிட்டனர். இதனால் மாம்பழங்களை மரத்திலேயே விவசாயிகள் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் சந்தை தலையீட்டுத் திட்டத்தில், தற்போதுள்ள மா விற்பனை விலைக்கும், சந்தை தலையீட்டு விலைக்கும் உள்ள வித்தியாசத்தை தமிழக மா விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.'' என்று அந்த கடிதத்தில் அவர் கோரியுள்ளார்.

மாம்பழச்சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாங்கூழ் அளவு உள்ளிட்ட FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்; மாங்கூழுக்கான ஜிஎஸ்டியை 12 லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்; மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வு முறையில் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க தமிழகத்தில் பிஎம்– ஆஷா சந்தைத் தலையீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமென்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மாம்பழத்துக்கு இவ்வளவு விலை குறைவாகக் கொடுப்பது பற்றி பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளரும், மாங்கூழ் ஆலை அதிபர்கள் கூட்டமைப்பின் தலைவருமான மதியழகனிடம் பிபிசி தமிழ் பேசியது. அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மாங்கூழ் உற்பத்தியாளராக இருந்ததாகத் தெரிவித்த அவர், தற்போதுள்ள விலை வீழ்ச்சிக்கு அவரோ, மற்ற மாங்கூழ் உற்பத்தியாளர்களோ காரணம் இல்லை என்றார்.

  • '20 லட்சம் பீப்பாய்கள்' - இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியாவில் என்ன நடக்கும்?
  • நாம் தூக்கி எறியும் ஷூ, அதன் பிறகு என்னவாகிறது தெரியுமா?
Mathiazhagan தற்போதுள்ள விலை வீழ்ச்சிக்கு தானோ, மற்ற மாங்கூழ் உற்பத்தியாளர்களோ இல்லை என்று மறுக்கிறார் மதியழகன்

''கடந்த 2023 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் ஜூஸ் பாட்டில்களில் 20 சதவிகிதம் மாங்கூழ் சேர்க்கப்பட்டது. அதனால் 1,000 டன் விற்பனை செய்ய முடிந்தது. 2024 ஆம் ஆண்டுக்குப் பின் அதைப் பாதியாக் குறைத்து விட்டனர். மேலும் விலையைக் குறைக்க 200 மில்லி ஜூஸ் பாட்டில்களை 150 மில்லி, 125 மில்லியாகச் சிறிதாக்கி விட்டனர். அதனால் மாங்கூழ் கொள்முதல் 450 டன்னாகக் குறைந்துவிட்டது. அதனால் கடந்த ஆண்டு நாங்கள் கொள்முதல் செய்ததே ஸ்டாக் உள்ளது.'' என்றார் மதியழகன்.

மேலும் தொடர்ந்த அவர், ''மா விவசாயிகளுக்கு ஆந்திர அரசு கொடுப்பது போல, கிலோவுக்கு 4 ரூபாய் மானியம் தரவேண்டுமென்று முதலமைச்சரிடம் பேசினேன். மத்திய அரசு நிதி தராமல் இழுத்தடிப்பதால் போதிய நிதியில்லை, ஆனாலும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். சிறு, குறு விவசாயிகளுக்கு இழப்பீட்டைச் சரிக்கட்டும் வகையில், குறைந்தபட்ச தொகையை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. நிச்சயமாக முதலமைச்சர் உரிய உத்தரவு பிறப்பிப்பார்.'' என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட, ஆண்டுக்கு ஆண்டு மா பயிரிடும் பரப்பு குறைந்து வருகிறது என்று கூறும் கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன், 40 ஆண்டுகள் வளர்ந்த மா மரங்களும் விலை வீழ்ச்சியால் வெட்டப்பட்டு வருகின்றன என்கிறார்.

''கடந்த 2 ஆண்டுகளில் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வீதம் நாங்கள் செலவு செய்துள்ளோம். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மா விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 60 ஆயிரம் வீதம் இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் இப்போதுள்ள மா மரங்களைக் காப்பாற்ற முடியும்." என்கிறார் செளந்தரராஜன்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.