மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 14 வயது ஏழாம் வகுப்பு மாணவி, தன்னை கடத்தியதாக போலி நாடகம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரது தாய் மற்றும் பாட்டி, லிப்ஸ்டிக் தடவுவதும் மொபைல் போன் பயன்படுத்துவதும் தவறு என கண்டித்ததையடுத்து மனமுடைந்த மாணவி, கடத்தல் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியேறினார். இவர் சமூகத்தில் தவறான தகவல் பரவவைக்க, வீட்டு அருகே கடத்தல் மிரட்டல் கடிதமொன்றையும் எழுதி விட்டுச் சென்றிருந்தார்.
ஜூன் 28ஆம் தேதி காலை 11 மணியளவில் மாணவி திடீரென காணாமல் போனார். அதே நாளிலேயே அவரது குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில், மர்ம நபர்கள் மாணவியை கடத்தி விட்டதாகவும், ஜூலை 10க்குள் ரூ.15 லட்சம் வாங்கி “படி கெர்மாய் கோவிலில்” செலுத்த வேண்டுமெனவும், தகவல் வெளியானால் மாணவியின் உடல் துண்டுகளாகக் காணப்படும் எனவும் மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக கமரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும், போலீசார் விசாரணையைத் துவக்கினர்.
விசாரணையின் போது சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவி சதார் பகுதியில் வீடு தேடி சுற்றித்திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் துரிதமாக சென்று மாணவியை மீட்டனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், இந்தக் கடத்தல் நாடகம் தானே திட்டமிட்டது என்றும், கடிதத்தையும் தானாகவே எழுதியதாகவும் மாணவி ஒப்புக்கொண்டார்.
தாயும் பாட்டியும் தொடர்ந்து திட்டுவதால் மனமுடைந்ததாகவும், தனது விருப்பப்படி ஒப்பனை செய்யவும், மொபைல் பயன்படுத்தவும் சுதந்திரம் இல்லாததால் தான் இப்படிச் செய்ததாகவும் மாணவி கூறியுள்ளார். மாணவியின் தாயார் கடந்த 15 ஆண்டுகளாக தனது பாட்டி வீட்டில் வாழ்ந்துவருகிறார். அவர் ஒரு வழக்கறிஞரின் வீட்டில் வேலை செய்து மகளின் கல்விக்காக உழைத்து வருகிறார். இது போன்ற சம்பவங்கள், குழந்தைகளிடம் அதிக கட்டுப்பாடுகள் விதிப்பது எதிர்மறையாக மாறக்கூடும் என்பதற்கான நினைவூட்டலாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த சம்பவம் செல்போன் பயன்பாடு குழந்தைகளிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.