கால்களை உடையுங்கள்; உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி..!
Newstm Tamil June 30, 2025 09:48 PM

புரி ஜெகநாதார் கோவில் ரத யாத்திரை கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த ரத யாத்திரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை கண்டித்து முதல்-மந்திரியின் வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த போலீஸ் கூடுதல் கமிஷனர் நரசிங்கா போலொ சக போலீசாருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். பேரிகேட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்த கூடுதல் கமிஷனர் நரசிங்கா போலொ, பேரிகேட் தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் யாரேனும் வந்தால் அவர்களை கைது செய்ய வேண்டாம். அவர்களின் கால்களை உடையுங்கள். போராட்டக்காரர்களின் கால்களை உடைப்பவர்கள் என்னிடம் வந்து பாராட்டை பெற்றுக்கொள்ளுங்கள்' என்றார். அவர் பேசும் வீடியோ தற்போது வைரலான நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவே உத்தரவிட்டேன் என்று கூடுதல் கமிஷனர் நரசிங்கா தெரிவித்துள்ளார்.   

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.