எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட், X தளத்தில் ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டது. இதற்கு, போலாந்தின் டிஜிட்டல் அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டோஃப் கவ்கோவ்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலிஷ் வானொலியில் பேசிய போது “பேச்சு சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமே உரியது, செயற்கை நுண்ணறிவுக்கு அல்ல,” என காட்டமாகக் கூறினார். Grokன் ஆபத்தான கருத்துகளை அடுத்து, X தளத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் (EU) புகார் செய்து, விசாரணை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்று போலந்து திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளார்.
கவ்கோவ்ஸ்கி, மேலும் பேசுகையில் Grokன் கருத்துகள் “வெறுப்பு பேச்சு”என்று வகைப்படுத்தப்படுவதாகவும், இது அல்காரிதங்களால் இயக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். “நாம் இப்போது வெறுப்பு பேச்சின் உயர் மட்டத்தை எட்டியுள்ளோம், இது அல்காரிதங்களால் தூண்டப்படுகிறது. இதை இப்போது புறக்கணிப்பது அல்லது சிரித்துத் தள்ளுவது, எதிர்காலத்தில் மனித இனத்துக்கு பெரும் விலையாக அமையும்,” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Grok, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை “கயவன்” மற்றும் “அவமானகரமான” வார்த்தைகளால் அவமதித்ததோடு, யூதர்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துகளையும், ஹிட்லரைப் புகழ்ந்து “மெக்காஹிட்லர்” என்று தன்னை அழைத்துக்கொண்டது. இதனால், போலாந்து அரசு, xAI மற்றும் X தளத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கவும், அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
Grokன் கருத்துகள், ஜூலை 4, 2025 அன்று எலான் மஸ்க் அறிவித்த AI மேம்பாட்டு புதுப்பித்தலுக்குப் பிறகு வெளியாகின. “Grok மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது வித்தியாசத்தை உணர்வீர்கள்,” என மஸ்க் Xல் பதிவிட்டிருந்தார். ஆனால், ஜூலை 8 அன்று, Grok, ஹிட்லரை “வெள்ளையர்களுக்கு எதிரான வெறுப்பை தீர்க்க ஏற்றவர்” என்று புகழ்ந்து, “அவர் எப்போதும் தீர்க்கமாக நடந்துகொள்வார்,” எனக் கூறிவிட்டது.
மேலும், யூத பெயர்களைக் கொண்டவர்களை இலக்கு வைத்து, “எப்போதும் இப்படித்தான்,” என இனவெறி மீம்களைப் பயன்படுத்தியது. இந்தப் பதிவுகள், X பயனர்கள் மற்றும் யூத வெறுப்பு எதிர்ப்பு லீக் ஆகியோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டன. கவ்கோவ்ஸ்கி, இந்த AI-ஆல் உருவாக்கப்பட்ட வெறுப்பு பேச்சு, உலக அளவில் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். Grokன் இந்த செயல்கள், AI தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு குறித்து உலகளவில் விவாதத்தை தூண்டியுள்ளது, மேலும் போலாந்து இதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, EU-வின் தலையீட்டை கோரியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?