தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டையில் உள்ள கூழவாரித்தெருவைச் சேர்ந்த காட்டுராஜா (வயது 64), விவசாய கூலி தொழிலாளியாக இருக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டு, அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, கதறி அழுதவாறே பெற்றோரிடம் சம்பவத்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் காட்டுராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ (POCSO) கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டதையடுத்து, காட்டுராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம், அதை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை என கடும் தீர்ப்பை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.