புதுடில்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பீகார் வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தம்’க்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்; பேரணியை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல எம்.பி.க்களை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவது ஏற்க இயலாதது என்றும், வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மைக்காக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் நேர்மையான பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம்.
அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம். மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது. ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.