கேரளா எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், அங்கமாலி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இதனிடையே அவருக்கும், பரவூர் பகுதியை சேர்ந்த கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் ''ரமீஸ்'' என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாற, அவர்கள் நெருங்கி பழகி வந்தனர்.அண்மையில் இளம்பெண்ணை ரமீஸ் தனது வீட்டுக்கு அழைத்து சென்று பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. பிறகு மனமுடைந்த இளம்பெண் கடந்த 9-ந் தேதி தூக்குப்போட்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.
இந்த தகவலறிந்த கோதமங்கலம் காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக காவலர்கள் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில்,இளம்பெண்ணின் வீட்டில் இருந்து, அவர் எழுதிய கடிதம் கிட்டியது.
அதை கைப்பற்றிய காவலர்கள் படித்தபோது ,"என்னை காதலன் ரமீஸ் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் மதம் மாற கட்டாயப்படுத்தியதால், நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்தது.
இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் தனது மகள் சாவுக்கு ரமீஸ் தான் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவலில் புகாரளித்தார்.அதன் பேரில் தற்கொலைக்கு தூண்டியது, பாலியல் வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரமீஸை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.