சென்னை குமரன் நகரில் பிட் புல் ரக நாய், ஒருவரை கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது. நாயின் உரிமையாளரான பூங்கொடி என்ற பெண்ணையும் மீறி, கருணாகரன் என்பவரை தொடை, இடுப்பில் பிட்புல் ரக நாய் கடித்துக்குதறியது.இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தடுக்க முயற்சித்த உரிமையாளரான பூங்கொடியையும் அந்த நாய் கடித்தது. அவரும் கே.கே.நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.இத்தகைய சூழலில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அரசு கடந்தாண்டு மார்ச் மாதம் 23 ரக நாய்களை தடை செய்து உத்தரவிட்டது. இவற்றில் பிட் புல் ரக நாய்களும் அடக்கம்.
இந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை, மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நாய்களை வளர்ப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பிட்புல் ரக நாய் கடித்துக் குதறியதில் ஒருவர் உயிரிழந்தார்.