“5 நிமிடத்தில் ஆட்டோ இல்லையென்றால் ₹50 பெறுங்கள்” என்ற வாக்குறுதிப் பொலிவுடன் வெளியான விளம்பரங்கள் மூலம் பயணிகளை தவறாக வழிநடத்தியதாக பைக் டாக்ஸி சேவையளிக்கும் ரேபிடோ நிறுவனம் மீது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விளம்பரங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், ‘₹50’ என்ற தொகை ரொக்கமாக வழங்கப்படவில்லை, ரேபிடோ நாணயமாக மட்டுமே வழங்கப்பட்டது என்றும் CCPA தெரிவித்துள்ளது.
மேலும், சலுகையை பயன்படுத்திய பயணிகளுக்கு உண்மையான தொகையை நிபந்தனை இல்லாமல் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அனைத்து தவறான விளம்பரங்களையும் நிறுத்த வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள் 548 நாட்களாகப் பரப்பப்பட்டதை CCPA கடுமையாக கண்டித்து, இந்த மோசடி நுகர்வோர் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இருந்ததாகக் கூறியுள்ளது. இதற்கான அபராதமாக ரேபிடோ நிறுவனம் ₹10 லட்சம் செலுத்தும் வரை இந்த வழக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.