ரூ.5 கோடி முறைகேடு செய்த புகாரில் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் கால்நடை மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வராக சௌந்தரராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்தக் கல்லூரியில் சுமார் ரூ.5 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சௌந்தரராஜன் பதவி காலத்தின் போது, கல்லூரிக்கு தேவையான உபகரணங்கள், திட்டங்களுக்கு தேவையான பொருட்கள், ஆய்வகங்களுக்கு தேவையான பொருட்கள், மருந்துகள் ஆகியவை வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் நிர்வாக குழு கூட்டத்தை நடத்தி, முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்க பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் கமிட்டி நடத்திய முதற்கட்டமாக விசாரணைடில், ரூ.5 கோடிக்கு அதிகமாக அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், கல்லூரி முதல்வராக இருந்த சௌந்தரராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதில் பொறுப்பு முதல்வராக சதீஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க 3 பேர் கொண்ட கமிட்டிக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.