போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல்; திருவள்ளூரில் வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது
Webdunia Tamil September 03, 2025 08:48 PM

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில், தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பரபரப்பு நிலவியது. வடமாநில தொழிலாளர்கள் சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 29 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் (35) என்பவர் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவர் தான் தங்கியிருந்த குடியிருப்பின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கு நியாயம் கோரி, ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வலுத்த நிலையில், போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், போலீசார் மீது கற்களையும், கட்டைகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காவல் துணை ஆணையர் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டி அடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 29 வடமாநில தொழிலாளர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் புழல் சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் பதற்றம் நிலவி வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.