Ramanathapuram: மகளிடம் பேச விடாமல் தடுத்ததால் ஆத்திரம்.. தாயை கொன்ற இளைஞர்!
TV9 Tamil News September 06, 2025 04:48 PM

ராமநாதபுரம், செப்டம்பர் 6: ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னுடைய பெண்ணிடம் பேச விடாமல் தடுத்த தாயை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் போக்குவரத்து நகர் பகுதியில் சேர்ந்தவர் இருளாண்டி என்பவரது மனைவி கருப்பாயி.  இவர் தற்சமயம் கணவரைப் பிரிந்து தனது மகள் திவ்யாவுடன் வாழ்ந்து வருகிறார். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் பாண்டியராஜன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 21 வயதான திவ்யா தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கருப்பாயி வீட்டில் வசித்து வந்தார். அவர் ராமநாதபுரம் அருகே மீன் வலை பின்னும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

திவ்யா – கருப்பசாமி தொடர்பு 

இப்படியான நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவிலுள்ள ஏ.நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகனான கருப்பசாமி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமநாதபுரம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் கருப்பசாமிக்கும் திவ்யாவிற்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி திவ்யாவின் வீட்டிற்கு கருப்பசாமி வருவதை அவரின் தாய் கருப்பாயி கண்டித்துள்ளார்.

Also Read: Crime: முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!

இதனால் கருப்பாயிக்கும் கருப்பசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கருப்பசாமியிடம் இனி நீ வீட்டிற்கு வரக்கூடாது என திவ்யா கூறியதாக சொல்லப்படுகிறது. திவ்யா இப்படி மனம் மாறியதற்கு கருப்பாயி தான் காரணம் என ஆத்திரமடைந்த கருப்பசாமி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அரிவாளால் வெட்டிக்கொலை

இதன்படி செப்டம்பர் 4ஆம் தேதி இரவு மீண்டும் கருப்பசாமி திவ்யாவின் வீட்டிற்கு சென்று அவரது அம்மா கருப்பாயிடம் தகராறு செய்தார். தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கிய நிலையில் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து திவ்யாவை திருமணம் செய்து கொள்ள மற்றும் அவரிடம் பழக நீ இடையூறாக இருக்கிறாய் எனக் கூறி கருப்பாயை சரமாரியாக வெட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பாயி படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து மயக்கமானார். தொடர்ந்து கருப்பசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது தாயை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அழைத்து சென்றார்.

Also Read: மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!

அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள் ஏற்கனவே கருப்பாயி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக திவ்யா புகாரளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கருப்பாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய கருப்பசாமியை தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.