இன்று மனம் திறக்கப்போவதாக கூறியிருந்த செங்கோட்டையன் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் இருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களிடம் தன்னுடைய நிலைபாடு குறித்து மனம் திறக்கப் போவதாக செங்கோட்டையன் கூறியிருந்தார்.
அவ்வாறாக இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவை ஒருங்கிணைப்பதே கட்சியின் வெற்றிக்கு வழி என அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் சேர தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக தான் மற்றும் 6 முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் உண்மையான அதிமுக விசுவாசி என்றும், அதிமுக துண்டு துண்டாக சிதறுவதை தவிர்க்க அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும் என கூறியுள்ள செங்கோட்டையன் அதற்காக 10 நாட்களை காலக்கெடுவாக விதித்துள்ளார். அதற்குள் பிரிந்தவர்களை இணைக்க முடிவு செய்யவில்லை என்றால் நாங்களே அவர்களை கட்சியில் இணைப்போம் என கூறியுள்ளார்.
ஆனால் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்று அவர் குறிப்பிடுவது சசிக்கலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்களையும் சேர்த்துதானா என்பதை அவர் பெயர் சொல்லி குறிப்பிடவில்லை.
Edit by Prasanth.K