தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் வாக்குரிமை விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்தாவது: வாக்குரிமை என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக இணைந்து அந்த உரிமையை பறிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் ராகுல் காந்தியும் பீகாரில் பயணம் மேற்கொண்டார். தற்போது வாக்குகளை பறிக்கும் பாஜக, அடுத்ததாக குடியுரிமையை பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
நான் எப்போதும் காங்கிரசின் குரலாகவே செயல்படுகிறேன். ஆனால் காங்கிரஸ் திமுகவுக்காக வேலை செய்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டு தவறானது. மின் கட்டண உயர்வு, தூய்மை பணியாளர் பிரச்சினை, ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரக் கோரி நடந்த போராட்டம் போன்ற பல பிரச்சினைகளில் திமுக அரசுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுத்தது. இதை மறைத்து பாஜக தவறான பிரசாரம் செய்கிறது.
பாஜக கூட்டணி ஏற்கனவே பல தேர்தல்களில் தோல்வி கண்டுள்ளது. அது ஒரு மூழ்கும் கப்பல். அதிலிருந்துதான் டிடிவி தினகரன் விலகினார். எங்கு பாஜக இருக்கிறதோ, அங்கு பிரிவினை, நாசமே உருவாகிறது. அ.தி.மு.க. உடைய பாஜக தான் காரணம்.
இந்தியா கூட்டணி வலுவாகவே உள்ளது. அ.தி.மு.க. அணிகள் ஒன்றானாலும், எதிர்க்கட்சித் தலைவராக வேறு ஒருவர் உருவாகும். தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு இடமே இல்லை" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.