செயற்கை நுண்ணறிவு உதவியுடன், ராணுவ அதிகாரி உருவாக்கிய ரேடாரில் இலக்குகளை தானாக கண்டறியும் அமைப்புக்கு இந்திய ராணுவம் காப்புரிமை பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இது வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், அதனை பயன்படுத்தி பல முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தற்போது ராணுவமும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் கர்னல் குல்தீப் யாதவ் என்பவர், ஏஐ உதவியுடன் ரேடார் மூலம் இலக்குகளை தானாக கண்டறியும் அமைப்பு ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு ராணுவம் காப்புரிமை பெற்றுள்ளது. இந்த புதுமையான கண்டுபிடிப்பானது, மனிதர்களின் தலையீடு இல்லாமல் ரேடார் மூலம் இலக்குகளை தானாக கண்டறிந்து வகைப்படுத்தி விடும் என்பதால், இதன் மூலம் ராணுவத்தின் பணி மேலும் வேகம் பெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்துறையில் சுயசார்பை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு துறையின் தன்னிறைவு இந்தியா என்ற உறுதிப்பாட்டுக்கும் கர்னல் குல்தீப் யாதவின் புதுமையான கண்டுபிடிப்பு வலுச்சேர்க்கிறது என ராணுவம் பெருமிதம் தெரிவித்துள்ளது.