விஜயின் பெரம்பலூர் பரப்புரை ரத்து.. அப்செட்டில் தொண்டர்கள்… காரணம் என்ன?
TV9 Tamil News September 15, 2025 05:48 AM

பெரம்பலூர், செப்டம்பர் 14 :  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் (TVK Chief Vijay)  பெரம்பலூர் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, விஜய் அவசர அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பெரம்பலூர் சென்ற விஜய், தொண்டர்களிடம் உரையாற்றாமல், பரப்புரை வாகனம் மீது ஏறி கையசைத்துவிட்டு சென்றுள்ளார். இதனால், தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார். 2025 செப்டம்பர் 13ஆம் தேதியான இன்று திருச்சியில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை அவர் தொடங்கினார். திருச்சியில் இருந்து தொடங்கிய விஜய், தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் மக்கள் சந்திப்பை நடத்துகிறார்.

இதற்காக 2025 செப்டம்பர் 13ஆம் தேதியான நேற்று தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மரக்கடையில் அவர் உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி ஏர்போட்டில் இருந்து தனது பிரச்சாரம் வாகனம் மூலம் அவர் சென்றார். வழிநெடுகிலும் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 11 மணியளவில் திருச்சி சென்ற விஜய், மதியம் 2 மணிக்கு ன் மரக்கடை சென்றார். அங்கு பேசிய விஜய், அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜயை காண லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்தனர்.

Also Read : திருச்சி என்றாலே திருப்புமுனைதான் – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்..

விஜயின் பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து

விஜயின் பிரச்சார வாகனத்தை சுற்றியும் தொண்டர்கள் கூட்டம் இருந்தது. இதனால், அரியலூர் பிரச்சாரமும் தாமதமானது. மாலையில் திட்டமிட்டு இருந்து அரியலூர் பிரச்சாரம் இரவு 8.30 மணிக்கு மேல் நடந்தது. அரியலூரிலும் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தொடர்ந்து, அரியலூர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, பெரம்பலூர் நோக்கி சென்றார். ஆனால், இரவு 12 மணிக்கு மேல் ஆகியும் பெரம்பலூர் சென்றடையவில்லை. குன்னம் சென்றாலும், இன்னும் பேச திட்டமிட்டிருந்த இடத்திற்கு 2 கி.மீ வரை பயணிக்க வேண்டி இருந்தது. தொண்டர்கள் அதிகமாக இருந்ததால் விஜய் பேசாமல் கைகளை மட்டும் அசைத்தப்படி சென்றுவிட்டார். மேலும், 2 நிமிடங்கள் பேசி இருந்தால் நன்றாக இருக்கும் என பெரம்பலூர் தவெக தொண்டர்கள் கூறினர்.

Also Read : விதிகளை மீறும் தொண்டர்கள்.. விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு!

இதனால், பல மணி வரை விஜயின் பேச்சுக்காக காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர். பாதுகாப்பு கருதியும், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல பல மணி நேரம் ஆகும் என்பதால், விஜயின் பெரம்பலூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, வேறு நாளில் பெரம்பலூரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.