தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை ரோடு மேம்பாலத்தில் இருந்து முதல்-அமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது . இந்த ரோடு ஷோ ராயக்கோட்டை மேம்பாலம், அண்ணா சிலை, பெங்களூரு சாலை வழியாக 5 ரோடு ரவுண்டானா வரை நடந்தது .
பின்னர் அங்கிருந்து சென்ற முதல்-அமைச்சர், சென்னை பைபாஸ் ரோடு வரையில் சென்று, பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து அவர் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவிற்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சரை கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.