கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் கூலித் தொழிலாளி இம்ரான். இவருக்கு ரேஷ்மா என்ற மனைவி இருந்தார். இதில் ரேஷ்மாவின் அக்கா மகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆகவே குழந்தை மற்றும் தாயை கவனிப்பதற்காக ரேஷ்மா மருத்துவமனையில் தங்கியிருந்தார். அப்போது ரேஷ்மாவுக்கு காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் ஊசி செலுத்திக் கொண்டார். இதையடுத்து ரேஷ்மா அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் மருத்துவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரேஷ்மாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின் ரேஷ்மாவின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கால் வலிக்கு ஊசி போட்ட பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.