அதிமுக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
வடசென்னையில் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். திமுக அரசின் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ததாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் 700 பேர் அமரும் வகையில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் நவம்பர் மாதம் திறக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்லும் போது வெளிப்படையாக எந்தத் தகவலையும் தெரிவிப்பதில்லை. இதன் மூலம், அவர் அதிமுகவை அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் சுதந்திரத்தை இழந்துவிட்டார்" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், சமீபத்தில் கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழா, அரசியல் ரீதியாக திமுகவை விமர்சித்தவர்களும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்றும் சேகர்பாபு குறிப்பிட்டார்.
Edited by Mahendran