சீனாவின் ஜிலின் மாகாணம், சாங்சுன் நகரில் நடைபெறவுள்ள சாங்சுன் விமானக் கண்காட்சி 2025 முன்னிட்டு, செப்டம்பர் 16ஆம் தேதி ஒத்திகைப் பறப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு பறக்கும் டிரோன்கள் வானில் மோதிய விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன மின்சார வாகன உற்பத்தியாளரான Xpeng Aeroht நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த இரண்டு eVTOL வகை பறக்கும் டிரோன்கள் , விமானக் கண்காட்சிக்கான பயிற்சி பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, போதிய இடைவெளி இல்லாமல் காற்றில் ஒன்றோடொன்று மோதின. அதன் விளைவாக, ஒரு டிரோன் தரையில் விழுந்து தீப்பிடித்துள்ளது. Xpeng Aeroht, செவ்வாய்க்கிழமை இதைத் தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
மேலும் இந்த விபத்து, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவிருக்கும் சாங்சுன் ஏர் ஷோ 2025 நிகழ்ச்சிக்கான ஒத்திகையின் ஒரு பகுதியாக, குவாங்டாங் எக்ஸ்பெங் ஏரோஹ்ட் ஜெனரல் ஏவியேஷன் நடத்திய பறக்கும் வாகனக் காட்சியின் போது நிகழ்ந்தது. சம்பவ இடத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. @SoundOfHope_SOH எனும் கணக்கு, சம்பவத்தின் காட்சிகளை வெளியிட்டு, “இரண்டு பறக்கும் டிரோன்கள் காற்றில் மோதியது, தீப்பிடித்தது” எனக் குறிப்பிடுகிறது. இதனால் நிகழ்ச்சிக்கு முன் பரபரப்பு நிலவியுள்ளது.