கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியை சேர்ந்தவர் அன்னக்கிளி. இவர் இன்று அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்தவழியாக வேகமாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக அன்னக்கிளி மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை அறிந்த அப்பகுதியினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் மாற்றுத்திறனாளி ராஜலிங்கம் என்பவரும் சென்றுள்ளார். இந்த நிலையில், ராஜலிங்கம் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு ரெயில் மோதி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் விபத்தில் உயிரிழந்த பெண்ணை காண சென்ற மாற்றுத்திறனாளி ராஜலிங்கமும் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.