தொலைநோக்கு ஆங்கில எழுத்தாளர்திரு.ஹெச் ஜி.வெல்ஸ் அவர்கள் பிறந்ததினம்!.
வரலாறு, அரசியல், சமூகம் ஆகிய அனைத்து களங்களிலும் தனது படைப்புகளால் தனிமுத்திரை பதித்த ஹெச்.ஜி.வெல்ஸ் (Herbert George Wells) 1866ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி நகரில் பிறந்தார்.
இவரது முதல் நாவலான தி டைம் மெஷின் 1895-ல் வெளிவந்து, மகத்தான வெற்றி பெற்று, இலக்கிய உலகில் பரபரப்பாக பேசப்படும் எழுத்தாளர் ஆனார்.
இவர் தொடர்ந்து அறிவியல் புனைகதைகள் எழுதி வந்தார். 1920-ல் வெளிவந்த அவுட்லைன் ஆஃப் தி வேர்ல்டு புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ, தி இன்விசிபிள் மேன், தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் ஆகிய நூல்கள் இவருக்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.
வாழ்நாளில் சுமார் 50 ஆண்டு காலம் எழுத்திற்காக தன்னை அர்ப்பணித்த தொலைநோக்கு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தனது 80-வது வயதில் 1946, ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று மறைந்தார்.
புரட்சி பாவலர் திரு.தமிழ் ஔி அவர்கள் பிறந்ததினம்!.
தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், செப்டம்பர் 21, 1924 - மார்ச் 24, 1965) புதுவையில் பிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள் கட்டுரைகள் இலக்கியத் திறனாய்வுகள் மேடை நாடகங்கள் குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர்.
திராவிடர் கழகத் தொண்டராக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமைத் தோழராக வளர்ந்தவர். 'தலித்து' என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் இழி நிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதினார்.