2009-ல் தி.மு.க. ஆட்சியில் ஒரே பதவிக்கு இருவேறு அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சம்பள முரண்பாடு கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31-ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு இதுதொடர்பாக ஆய்வு செய்ய 2023 ஜனவரி 1-ல் 3 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. ஆனால், அதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து, இடைநிலை ஆசிரியர்கள் வருகிற 29-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.