சீனாவின் சொங்சிங் நகரில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சொந்த நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபர் ஜூ என்பவருக்கு, தன்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு வந்த ஹீ என்ற இளைஞருடன் நெருக்கம் உருவாகியது. இருவரும் திருமணமானவர்களாக இருந்த போதிலும், காதலுக்கு இடமளித்தனர்.
தன்னுடைய காதலை உறுதிப்படுத்த, ஹீயின் மனைவி செனுக்கு நேரடியாக 30 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் ₹3.72 கோடி) அனுப்பி வைத்த ஜூ, அந்தத் தொகையை விவாகரத் தீர்வு மற்றும் குழந்தை பராமரிப்பு தொகையாக செலுத்தியதாக கூறப்பட்டது. பின்னர் ஹீ மற்றும் சென் இருவரும் விவாகரத்துக்குச் சென்று, ஜூ-வுடன் ஹீ ஒரு வருடம் வாழ்ந்தார்.
ஆனால் ஒரு வருடம் கழித்து, ஹீ தன்னுடைய வாழ்வில் சரியான நபர் இல்லை என்பதை உணர்ந்த ஜூ, தன்னால் செலுத்தப்பட்ட தொகையை மீட்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் முதலில் ஜூவுக்கே சாதகமாக தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றம் அந்த பணம் “சட்ட விரோதமான பரிசு” எனக் கூறி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் ஹீ மற்றும் அவரது முன்னாள் மனைவி சென், மேன்முறையீடு செய்தனர். உயர் நீதிமன்றம், ஜூ அந்த தொகையை நேரடியாக செனுக்கு வழங்கியதற்கான ஆதாரம் இல்லை என்றும், அந்த தொகை விவாகரத்துக்காகவே நலத்தொகையாக வழங்கப்பட்டதையும் ஏற்க முடியாது என்றும் கூறி கீழ்நிலை நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்தது.
இந்த சம்பவம் தற்போது சீன சமூக ஊடகங்களில் விறுவிறுப்பாக பேசப்படுகிறது. “ஊழியரின் விவாகரத்துக்காக கோடிகள் செலவழிப்பது ஒரு முட்டாள்தனமான முடிவு” என சிலர் விமர்சனம் செய்ய, “முயற்சியில் காதல் நம்பிக்கையை இழந்து, பணத்தையும் இழந்தார்” என சிலர் கிண்டலாக எழுதினர்.