16வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், கிழக்குச் சீமையிலே, தாஜ்மகால், கருத்தம்மா என பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவரது படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட்தான். கிராமத்து மணம் கமழும் படங்களை எடுப்பதில் இவர் வல்லவர்.
கடந்த ஏப்ரல் மாதம் இயக்குனர் இமயத்துக்குப் பெரிய சோகம் நிகழ்ந்தது. அது யாராலும் தாங்க முடியாத ஒன்று. புத்திர சோகம். அவரது அருந்தவப்புதல்வன் மனோஜ் காலமானதுதான். அந்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் இன்னும் தவிக்கிறார். இதுகுறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் என்ன சொல்கிறார்னு பாருங்க.
பையனை இழந்தஅந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. சாகற வரைக்கும் மறக்க முடியாது. ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாரு. அதோடு புத்திரசோகமும் சேர்ந்ததும் அவரால தாங்க முடியல. என்னைப் பொருத்தவரை அவன் இன்னும் எங்கூட வாழ்ந்துகிட்டுத்தான் இருக்கான்.
இறந்தான்கற ஃபீலே தெரியல. 5 வருஷம் என் தோள்ல போட்டு வளர்த்தேன்.இப்போது யாரையும் பார்க்க விடல. மறந்து இருக்குறதை நினைவுபடுத்திருவாங்களோன்னு அப்படி வச்சிருக்கோம். கொஞ்சம் நார்மலா ஆனதும் பார்க்க விடலாம்னு இருக்கோம்.
இது நினைச்சே பார்க்க முடியாத இழப்பு. இறைவன் அருளால மீண்டு வரணும். பாரதிராஜாவுக்கு பழைய நினைவே இல்லையே. ஆனா அவருக்கு இன்னும் ஒரு ஆசை இருக்கு. டேய் அடுத்து ஒரு படத்தை எடுக்குறேன். உன்னை நடிக்க வைக்கிறேன். இதுவரைக்கும் நடிக்க வைக்கலன்னு சொன்னாரு. 15 வருஷத்துக்கு முன்னால நான் நடிக்க வச்சிருக்கணும். உனக்கும் ஒரு பேரு கிடைச்சிருக்கும். நீயும் சம்பாதிச்சிருப்பே. தப்பு பண்ணிட்டேன்னு சொன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.