கல்வித்துறை அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்..!
WEBDUNIA TAMIL September 24, 2025 08:48 PM

உத்திரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி தலைமை ஆசிரியர், தன்னை விசாரித்துக்கொண்டிருந்த கல்வித்துறை அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரான பிரிஜேந்திர வர்மா, அதே பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியை ஒருவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்காக, மாவட்ட கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங், வர்மாவை அவரது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.

விசாரணையின்போது, உதவி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளனர். அப்போது, கல்வி அதிகாரிக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் தனது இடுப்பில் இருந்த பெல்ட்டை எடுத்து, கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங்கை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் தலைமை ஆசிரியரை கைது செய்ததுடன், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.