கேரள மாநிலம் கோட்டையம் தம்பலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அனந்து அஜி(24). இவர் திருவனந்தபுரத்தில் கடந்த 9-ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யும் முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மரண காரணம் குறித்த பதிவை டைப் செய்து ஷெட்யூல் செய்து வைத்திருந்தார். அந்த இன்ஸ்டாகிரம் பதிவில் கூறியுள்ளதாவது:
"என்னால் இன்னும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. நான் எதிர்கொண்ட அதிர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே காரணம். நான்கு வயது முதல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். இது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. கடந்த ஓராண்டுகளாக நான் சிகிச்சையில் இருந்தேன். ஆறு மாதங்களாக மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லை. பல வருடங்களாக நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் வேலை செய்தேன். அதுபோன்று வெறுக்கத்தக்க வேறு அமைப்புகள் இல்லை. வாழ்க்கையில் ஒரு போதும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரை உங்கள் நண்பனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அது தந்தையாக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும் சரி அவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைத்து விடுங்கள். அவ்வளவு விஷம் கொண்டு நடக்கக் கூடியவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.
அந்த நபருடைய பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. அவரால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஐ.டி.சி, ஓ.டி.சி முகாம்களில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். உடல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானேன். காரணம் இல்லாமல் அடித்தார்கள். எனக்கு மட்டுமல்ல பலரும் இதுபோன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் சித்திரவதைக்கு உள்ளாகி உள்ளனர். இப்போதும் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பலருக்கும் இதுபோன்று நடக்கின்றன. அவர்களை அந்த அமைப்பிலிருந்து காப்பாற்றி கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
நான் மனரீதியாக எவ்வளவு கஷ்டப்படுகிறேன் எனத் தெரியுமா. கையில் ஆதாரம் இல்லாததால் இதை வெளியே சொன்னால் நம்ப மாட்டார்கள். அதனால்தான் எனது உயிரை ஆதாரமாக அளிக்கிறேன். எனக்கு ஏற்பட்டதுபோன்று உலகத்தில் ஒரு குழந்தைக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்படக்கூடாது. குழந்தைகளுக்கு தாய், தந்தையர் கட்டாயமாக பாலியல் கல்வி அளிக்க வேண்டும். குட் டச், பேட் டச் குறித்து விளக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களிடம் கோபப்படக்கூடாது. என்னை மோசமாக பயன்படுத்தியவர்களைப் போன்றவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். பயம் காரணமாக வெளியே சொல்லமாட்டார்கள். நானும் பயத்தின் காரணமாகத்தான் பெற்றோரிடம் கூட சொல்லவில்லை."
இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.