உலகில் 8 போர்களை நிறுத்தியதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 9வதாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலை நிறுத்த வேண்டியிருந்தால், அது தனக்கு மிகவும் எளிதான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது அல்லது ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடந்து கொண்டிருப்பது புரிகிறது.
அதைத் தீர்க்க வேண்டியிருந்தால், முடிவுக்கு கொண்டுவருவது எனக்கு எளிதானதுதான். ஆனால் இதற்கிடையில், நான் அமெரிக்க அரசை நடத்த வேண்டும்... போர்களைத் தீர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்" எனக் கூறியுள்ளார்.
எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லைமேலும் அவர், "ஒவ்வொருமுறை நான் போரை நிறுத்தும்போதும் 'அடுத்த போரை நிறுத்தினால் உங்களுக்கு நோபல் பரிசு தருவார்கள்' என்பார்கள். நாம் இதுவரை 8 போரை நிறுத்தியிருக்கிறோம். மில்லியன் கணக்கான உயிர்களைக் காத்திருக்கிறோம். ஆனால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. ஏதோ ஒரு பெண்ணுக்கு கொடுத்திருக்கிறார்கள். அவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் மிகவும் அழகாக இருந்தார்... நமக்கு அதைப் (நோபல்) பற்றி கவலை இல்லை. நான் அதை மறந்துவிட்டேன். உயிர்களைக் காப்பதுதான் முக்கியம்" என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதில் வெளிநாட்டின் பங்கு இல்லை என இந்தியா தரப்பில் பலமுறை விளக்கப்பட்டாலும் ட்ரம்ப் தொடர்ந்து தானே போரை நிறுத்தியதாகக் கூறிவருகிறார்.
கடந்த அக்டோபர் 11ம் தேதி முதல் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹரூன் ஆகிய மூன்று விளையாட்டுவீரர்களுடன் 5 பொதுமக்களும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு உட்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஷரானா என்ற இடத்தில் விளையாடிவிட்டு உர்கான் பகுதிக்கு திரும்பிய விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் ரஷித் கான், முகமது நபி உள்ளிட்ட கிரிக்கெட்டர்கள் இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக பாகிஸ்தான், இலங்கை உடனான முத்தரப்பு தொடரிலிருந்து விலகியது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை பிரச்னை
பாகிஸ்தான் அக்டோபர் 15ம் தேதி இருநாடுகளுக்குமிடையே போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 11ம் தேதி பாகிஸ்தானில் செயல்படும் தாலிபான் தீவிரவாதிகளுக்கு (TTB) ஆப்கானிஸ்தான் உறைவிடம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டி தாக்குதலைத் தொடங்கியது பாகிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிவரும் டுராண்ட் எல்லைப் பிரச்னை இப்போதைய மோதலுக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் தாலிபான் அரசாங்கம் சமீபமாக இந்தியா உடன் நெருக்கமாவதும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தாலிபன்: இந்தியாவில் ஆப்கன் அமைச்சர்; கொடியில் குழப்பம் - வருகையின் பின்னணி என்ன?