சீருடையில் இருந்த போக்குவரத்து காவலரை தாக்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா எதிரே போக்குவரத்து காவலர் பிரபாகரன் என்பவர் நேற்று மதியம் 1.40 மணியளவில் 4 சக்கர வாகனத்தில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அண்ணாசாலையில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமாருக்கு சொந்தமான வாகனம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து காவலர் பிரபாகரன் வண்டியை எடுக்க சொல்லியுள்ளார். இதனால், எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் போக்குவரத்து போலீசார் பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார், போக்குவரத்து காவலர் பிரபாகரனை தகாத வார்த்தைகளால் பேசி, அவரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
சீருடையில் இருந்த காவலரை, ஆளுங்கட்சி கூட்டணி (காங்கிரஸ்) சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சாலை போலீசார் எம்எல்ஏ ராஜ்குமார் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாஏற்படுத்துதல் காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.