நடிகர் ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு, பராசக்தி, ஜெனி ஆகிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.
இதுமட்டுமல்லாமல், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ரவி மோகன், யோகி பாபுவை வைத்து `An Ordinary Man' என்ற படத்தை இயக்குகிறார்.
மேலும், `ரவி மோகன் ஸ்டுடியோஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கும் ரவி மோகன், `ப்ரோ கோட் (BRO CODE)' என்ற படத்தைத் தயாரிக்கிறார்.
டிக்கிலோனா படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், யோகி பாபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
BRO CODE
இவ்வாறிருக்க, BRO CODE என்ற பெயரில் பல ஆண்டுகளாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்துவரும் இன்டோ-ஸ்பிரிட் பீவரேஜஸ் நிறுவனம் (Indospirit Beverages Pvt Ltd), BRO CODE பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் செல்லவே, அங்கு தயாரிப்பு நிறுவனத்துக்குச் சாதகமான உத்தரவு கிடைத்தது.
இதனால், மதுபான நிறுவனம் இந்த விவகாரத்தில் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கெதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வர்த்தக முத்திரை மீறல் வழக்கைத் தொடுத்தது.
இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தேஜாஸ் காரியா முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுபான நிறுவனம் தரப்பில், ``2015 டிசம்பரில் ப்ரோ கோட் என்ற வர்த்தக முத்திரையின் கீழ் எங்களின் முதன்மை தயாரிப்பைக் கொண்டுவந்தோம்.
எங்களின் இந்தத் தயாரிப்பு வணிக ரீதியாக எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தில் இந்தப் பெயரைப் பயன்படுத்துவது வர்த்தக முத்திரை மீறல். இது எங்களது பிராண்ட் மீதான நற்பெயரைப் பாதிக்கும்" என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்றம்
மறுபக்கம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ``வர்த்தக முத்திரை சட்டத்தின் 41-ம் வகுப்பின் கீழ் மதுபான நிறுவனம் கூறும் வர்த்தக முத்திரைக்கு எந்தப் பதிவும் இல்லை.
மதுபான நிறுவனத்தின் விண்ணப்பம் வர்த்தக முத்திரைகள் பதிவேட்டில் நிலுவையில் இருக்கிறது" என்று வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேஜாஸ் காரியா, ``மனுதாரரின் (மதுபான நிறுவனம்) எந்த அனுமதியும் இல்லாமல் படத்தில் அவர்களின் முத்திரை பயன்படுத்தப்பட்டிருப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இது மீறலுக்குச் சமம். இது மனுதாரரின் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
மேலும், நுகர்வோரிடம் மனுதாரர் பெற்றிருக்கும் நம்பிக்கை மற்றும் நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்க வழிவகுக்கும்" என்று கூறி BRO CODE-ஐ பயன்படுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
மேலும் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் இதில் பதிலளிக்குமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 23-ம் தேதி ஒத்திவைத்தது.
``நியாயமான கேள்விகள்; சிந்தனையைத் தூண்டும் படம்" - `சக்தித் திருமகன்' படத்துக்கு ஷங்கர் பாராட்டு