"கே.என்.நேரு, சகோதரர்களின் 'JOB RACKET' ; ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" - எடப்பாடி பழனிசாமி காட்டம்
Vikatan October 30, 2025 12:48 AM

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் கே.என். நேரு மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ. 888 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டின் போது இது தெரியவந்துள்ளது.

`நகராட்சி பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழலா?’ - அமைச்சர் கே.என் நேரு சொன்ன விளக்கம்

பாஜக மற்றும் அதிமுகவினர் "நீதித்துறை மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தி, அமைச்சர் கே.என் நேரு மற்றும் திமுகவின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கு அமைச்சர் கே.என். நேரு, "2012, 2013, 2014, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு பதவிகளுக்கு இதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத்தான் இந்த பணிநியமமும் நடந்திருக்கிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் மட்டும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் தலையிட்டதால் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்ற குற்றச்சாட்டு பொய்யானது. திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற அரசியல் உள்நோக்கத்தோடு இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது" என்று விளக்கமளித்திருக்கிறார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, "எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த விடியா திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

கே.என்.நேரு - ஸ்டாலின் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் சட்ட விரோத செயல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் நடத்திய சோதனைகளின் விளைவாக இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. 'JOB RACKET ' முறையில் நடைபெற்ற இந்த ஊழலில் திமுக அரசின் இந்த துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் நிறுவனங்கள், அதிகாரிகள் இணைந்து வேலை வாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலித்ததாகவும், அந்த பணத்தை ஒருசில நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த இமாலய ஊழல் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய காலாக்கட்டங்களில் நடைபெற்றதையும், இது தொடர்பாக கிடைத்த பல ஆவணங்களை அமலாக்கத்துறை தமிழக காவல்துறை டி.ஜி.பி-க்கு அறிக்கையுடன் சமர்ப்பித்து, ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களும் இணைக்கப்பட்டு, இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.

`நகராட்சி பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழலா?’ - அமைச்சர் கே.என் நேரு சொன்ன விளக்கம்

தமிழக காவல்துறை இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான் தங்களால் சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழக காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி அவர்கள் இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை மூலம் பதிவு செய்ய வலியுறுத்துகிறேன்.

பொம்மை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி. அரசுப்பணி என்பது பல்வேறு இளைஞர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க இரவு, பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை, தங்களின் கமிஷன் கொள்ளைக்காக சிதைக்கும் திமுக அரசுக்கு ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்!" என்று கூறியிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.