அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
BBC Tamil November 01, 2025 09:48 AM
BBC

சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இயங்கி வருபவராக அறியப்படுகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம், 'பத்து நாட்களுக்குள் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென' செங்கோட்டையன் கெடு விதித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, கெடு விதித்த மறுநாளே கே.ஏ. செங்கோட்டையன் அதிமுக கட்சியில் வகித்து வந்த பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

நேற்று (அக்டோபர் 30), அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒன்றாக அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில் இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

ADMK
  • செங்கோட்டையன் விதித்துள்ள 10 நாள் கெடுவால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியா?
  • செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டதால் அதிமுகவுக்கு என்ன பாதிப்பு?
  • செங்கோட்டையன் கெடு விதித்ததன் பின்னணியில் பாஜக? யூகங்களுக்கு வித்திடும் 'சந்திப்புகள்'
  • எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?- செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்
  • எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு: அதிமுக, பாஜக மற்றும் பிற கட்சி தலைவர்கள் கருத்து
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

"அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்" செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து செங்கோட்டையன் செயல்பட்டுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒன்றிணைந்து, "கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக" அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு மதுரையிலிருந்து ஒரே காரில் ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் பயணம் செய்து பசும்பொன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் - செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுக்கு எதிரி இல்லை. எடப்பாடி, திமுகதான் எங்களுக்கு எதிரி. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எடப்பாடி என்கிற துரோக மனிதர்தான் எதிரி. வேறு யாரையும் நாங்கள் எதிரியாகப் பார்க்கவில்லை." எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து மதுரை கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சேர்ந்து வந்தது குறித்து கேள்வியெழுப்பினர்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் அவர்கள் இருக்கும்போதே குழிபறித்ததால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகள் அதிமுகவில் இருந்ததால் தான் 2021ல் எங்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வரும் என ஓபிஎஸ் கூறினார். உண்மையான அதிமுகவினரால் எப்படி இப்படி கூற முடியும். மூவரும் திமுகவின் 'பி' டீமாக இருந்து செயல்படுகின்றனர்." என தெரிவித்தார்.

மேலும், "செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை. அதற்கு சில நடைமுறைகள் உள்ளன, பொறுத்து இருங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

BBC செங்கோட்டையன் விதித்த கெடு

பத்து நாட்களுக்குள் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென கே.ஏ. செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் கெடு விதித்திருக்கிறார்.

''கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தல்களில் கட்சியால் வெற்றிபெற முடியும். பத்து நாட்களுக்குள் இதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால் எடப்பாடி கே. பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன். இதே மனநிலையில் உள்ளவர்களுடன் சேர்ந்து, பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான முயற்சிகளைச் செய்வேன்" என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

அவரது இந்தக் கருத்தை வரவேற்பதாக அ.தி.மு.கவின் முன்னாள் நிர்வாகிகளான வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் அப்போது தெரிவித்திருந்தனர்.

"கழகம் (அதிமுக) ஒன்றுபட வேண்டுமென்ற செங்கோட்டையனின் கருத்துதான் ஒவ்வொரு தொண்டனின் கருத்தும். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்" என வி.கே. சசிகலா விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

"'ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்' என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார். நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம்" என ஓ. பன்னீர்செல்வமும் தெரிவித்தார்.

கெடு விதித்த மறுநாளே கே.ஏ. செங்கோட்டையன் கட்சியில் வகித்து வந்த பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று அவர் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் அதிமுகவைச் சேர்ந்த யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.