சென்னை, நவம்பர் 03: தமிழகம் முழுவதும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தின் கீழ் நவம்பர் 3ஆம் தேதி முதல் 6 ம் தேதிவரை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தாயுமானவர் திட்டத்தில் 20.42 லட்சம் மூத்த குடிமக்களும், 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்திற்கான வயது வரம்பை 70லிருந்து 65ஆக தளர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 65 வயது உள்ளோருக்கும் ரேஷன் பொருள்கள் வீட்டிலேயே கொண்டு வந்து வழங்கப்பட உள்ளது.
Also read: தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்படை அட்டூழியம்!
2025 ஆகஸ்ட் மாதம் இத்திட்டம் தொடக்கம்:தமிழகத்தில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையிலும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நியாய விலைக் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பொருள்களை வழங்கும் வகையில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், அவரே பயனர்கள் வீடு தேடி நேரில் நேரில் சென்று பொருள்களை வழங்கினார்.
இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
Also read: கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. தமிழக அரசு சொன்ன GOOD NEWS!!
ஒவ்வொரு மாதமும் விநியோகம்:இந்த திட்டத்திற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேதியை முடிவு செய்து, ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளுக்கு உத்தரவிட்டு வருகின்றர். அதன்படி, இம்மாதம் இத்திட்டத்தின் கீழ் நவம்பர் 3 முதல் 6 ம் தேதிவரை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.