தனுஷ் படத்தில் நடிக்க 'அட்ஜஸ்ட்மென்ட்' குற்றச்சாட்டு: நடிகை மான்யா ஆனந்த் மறுப்பு!
Seithipunal Tamil November 20, 2025 02:48 PM


சென்னை: 'வானத்தைப் போல', 'கயல்' உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை மான்யா ஆனந்த், தனுஷ் படத்தின் மேலாளர் பெயரில் தனக்குப் பாலியல் அட்ஜஸ்ட்மென்ட் வற்புறுத்தல் வந்ததாக நேர்காணலில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நடிகை மான்யா ஆனந்தும், குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படும் ஷ்ரேயாஸும் விளக்கமளித்துள்ளனர்.

முதலில் நடந்த குற்றச்சாட்டு:

சமீபத்திய நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் பெயரில் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார். நான் மறுத்தபோது, 'தனுஷாக இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ண மாட்டீர்களா?' என்று அவர் மெசேஜ் அனுப்பினார். நாங்கள் நடிகர்கள், வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று கூறியிருந்தார்.

ஷ்ரேயாஸ் மறுப்பு:

இதற்குப் பதிலளித்த ஷ்ரேயாஸ், "என் பெயரிலோ அல்லது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பெயரிலோ வந்த 'Casting call' முற்றிலும் பொய்யானது" என்று மறுப்புத் தெரிவித்தார்.

மான்யா ஆனந்த் விளக்கம்:

தொடர்ந்து, நடிகை மான்யா ஆனந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்:

"நான் தனுஷ் மீது குற்றச்சாட்டு சுமத்தியதாகப் பரவும் தகவல் பொய்யானது. நேர்காணலில், ஷ்ரேயாஸ் என்பவரின் பெயரைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் எனக்குப் போன் செய்ததாகவே கூறினேன். அதாவது, தனுஷ் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை விழிப்புணர்வுக்காகவே சொன்னேன். என்னுடைய பெயரைப் பயன்படுத்தி தனுஷ் சாருக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் செயல் மிகவும் தவறு. ஆகவே, பொய்யான தகவலைப் பரப்ப வேண்டாம்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.