சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பத்தைச் சேர்ந்த ராஜா (56) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (55). இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதை அறிந்த ராஜா, தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை ராஜா சொந்த ஊர் செல்வதற்காக போரூர் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் மனைவிக்காகக் காத்திருந்தார்.
அப்போது, அவரது மனைவி சுலோச்சனா, தனது கள்ளக்காதலன் வேதநாயகத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, தான் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்ததில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ராஜா சுத்தியலால் தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் சுலோச்சனா சரிந்து விழுந்த நிலையில், சுலோச்சனாவுடன் வந்த கள்ளக்காதலன் வேதநாயகம் மற்றும் அவரது நண்பர்கள், ராஜாவை சரமாரியாகத் தாக்கியதில் அவரும் காயம் அடைந்தார்.
இதையடுத்து, காயமடைந்த கணவன் – மனைவி இருவரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜா மற்றும் சுலோச்சனாவின் கள்ளக்காதலன் வேதநாயகம் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.