சென்னை 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு!
Seithipunal Tamil November 21, 2025 11:48 AM

நெடுஞ்சாலை மற்றும் சிப்காட் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தியதில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையில் உள்ள ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பைனான்சியர்கள் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை (ED) நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது.

சோதனையிடப்பட்ட முக்கிய இடங்கள்:

கே.கே. நகரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் பைனான்சியர் மகாவீர் வீடு, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் கலைச்செல்வன் வீடு, அம்பத்தூரைச் சேர்ந்த பிரகாஷ் வீடு, கோடம்பாக்கம் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், சௌகார்பேட்டையைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சுனில் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனைக்கான காரணம்:

அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுகுறித்துத் தெரிவிக்கையில், 2022-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சிப்காட் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்தியதில் நடந்த இரண்டு முக்கிய மோசடிகள் தொடர்பாக இந்தக் சோதனை நடத்தப்பட்டது.

சிப்காட் நில மோசடி: அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில்.

நெடுஞ்சாலை நில மோசடி:

அரசு நிலத்தை வேறொருவருக்குப் பட்டா போட்டு, பின்னர் அந்த நிலத்தை நெடுஞ்சாலைத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தியது போலப் போலி ஆவணங்கள் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் காஞ்சிபுரம் போலீஸார் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்.இந்தச் சோதனையின் முடிவில் மேலும் பல முக்கிய விவரங்கள் தெரியவரும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.