IPL போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க முடியாது… மாநில துணை முதல்வர் உறுதி…!!!
SeithiSolai Tamil December 08, 2025 06:48 AM

ஐ.பி.எல். கிரிக்கெட் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற பாராட்டு விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழா நடந்த பின்னர், சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்துக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகமும், கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் என்று கூறி கப்பன்பார்க் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார்.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு அகற்றுவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். இதனால், சின்னசாமி மைதானத்தின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் அவர்கள், ஐ.பி.எல். போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், “சின்னசாமி மைதானத்தின் பெயரைப் பாதுகாப்போம், அதோடு மாற்றாக ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தையும் கட்டுவோம்” என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். இந்த மாறுபட்ட கருத்துகள் ஆளுங்கட்சிக்குள் மேலும் சில விவாதங்களை உருவாக்கியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.