எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் கொடுத்து மோசடி செய்துள்ள இஸ்லாமிய குடும்பம்; முதல் தகவல் அறிக்கை பதிவு..!
Seithipunal Tamil December 08, 2025 07:48 AM

எஸ்ஐஆர் படிவத்தில் தவறாக தகவல்களை அளித்த குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட 03 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள  சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்ஐஆர் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இந்த நடவடிக்கையில், உண்மையான வாக்காளர் யார்..? பல இடங்களில் உள்ள ஒரே வாக்காளரை அடையாளம் இனம் காணுதல், இடம்மாறிய மற்றும் உயிரிழந்த வாக்காளர்களை பற்றிய விவரங்களை அறிதல் மற்றும் நீக்குதல் போன்றவைகாகவே எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்படுகிறது.

பீஹாரை தொடர்ந்து அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் வேகம் எடுத்துள்ளன. தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த சூழலில் விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்ததாக உ.பி. மாநிலம் ராம்பூரில் பெண் உள்ளிட்ட 03 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ராம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜூவாலா நகரில் வசிப்பவர் நூர்ஜஹான். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் முறையே ஆமிர் கான், டானிஷ் கான் ஆகும். நீண்ட ஆண்டுகளாகவே துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்ஐஆர் படிவத்தை நூர்ஜஹான் சமர்ப்பித்துள்ளார். அதில் ஜூவாலா நகரில் அவர்கள் வசித்து வருவதாக நூர்ஜஹான் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த படிவத்தை அவர் சமர்ப்பித்த பின்னர், சம்பந்தப்பட்ட ஜூவாலா நகர் பகுதியில் தேர்தல் கமிஷனின் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கள சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டிஜிட்டல் சரிபார்ப்பின் போது, நூர்ஜஹான் தந்த தகவல்கள் அனைத்தும் தவறானது என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மகன்கள் ஜூவாலா நகரில் வசிப்பது போல குறிப்பிட்டு, இருவரின் கையெழுத்தையும் நூர்ஜஹானே போட்டு படிவத்தை சமர்ப்பித்துள்ளார்.

இதயனையடுத்து குறித்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அடுத்து தாய் நூர்ஜஹான் மற்றும் அவரின் இரு மகன்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, நூர்ஜஹான் சமர்ப்பித்த எஸ்ஐஆர் படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கள சரிபார்ப்பில் ஈடுபடுத்தினர். அப்போது, ஆமிர் கான், டானிஷ் கான் இருவரும் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டது. வெளிநாடுகளில் மகன்கள் வசித்தாலும் உள்ளூரில் வசிப்பது போல் அவர்களின் தாய் கணக்கெடுப்பு படிவத்தில் தகவல்களை நிரப்பி, அவர்கள் போலவே கையெழுத்திட்டுள்ளார்.

இது 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 31ஐ மீறும் குற்றமாகும். இந்த சட்டப்பிரிவின் படி ஒருவர் வாக்காளரின் நிலை குறித்து தவறான அறிவிப்பு அல்லது தவறான தகவலை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். மகன்கள் இருவர், தாயார் என 03 பேரும் வேண்டும் என்றே உண்மைகளை மறைத்து மோசடி செய்து இருக்கின்றனர். இது பிஎன்எஸ் 2023-இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த சம்பவம் குறித்து ராம்பூர் மாவட்ட ஆட்சியர் அஜய்குமார் திவேதி கூறியதாவது; ''தலைமை தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது. தவறான தகவல்களுடன் படிவங்களை தாக்கல் செய்வது அல்லது உண்மைகளை மறைப்பது தேர்தல் விதிகளை கடுமையாக மீறுவதாகும்.'' என்று அஜய்குமார் திவேதி கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.