ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் தனது 18 வருட கனவினை இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி, இறுதிப்போட்டியில், பஞ்சாப் அணியை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.
இதனை முன்னிட்டு, ஆர்.சி.பி. அணிக்கு பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. அப்போது ஆர்.சி.பி. ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 03 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இருப்பினும் இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். ஆனால், அரசின் பாதுகாப்பு குறைபாடும், அலட்சியமே குறித்த 11 பேரின் உயிரிழப்பிற்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் தற்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், " ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம். சின்னசாமி மைதானத்தின் பெயரைப் பாதுகாப்போம், மாற்றாக ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தையும் கட்டுவோம்" என்று கூறியுள்ளார்.