நாடு முழுவதும் பனிக்காலம் தொடங்கிய நிலையில் பனிமூட்டத்தோடு காற்று மாசு கலந்து இருப்பதால் பல்வேறு நகரங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது . உதாரணமாக தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 40 நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனயில் காற்று மாசு 462 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாகவே டெல்லி மக்கள் காற்று மாசு காரணமாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர் .

தமிழகத்தை பொறுத்த மட்டில் பருவமழையின் தீவிரம் குறைந்து பனிமூட்டம் அதிகரித்திருப்பதால் காற்று மாசு பனியோடு கலந்து பல்வேறு நகரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களின்படி, ஆண்டின் 7 மாதங்கள் சென்னையின் காற்றின் தரம் மிதமானதாகவும் மீதமுள்ள நான்கு மாதங்கள் ஆரோக்கியமற்றதாக வகைப்படுத்தப்படுகிறது. வழக்கமாக காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக பருவ மழை மற்றும் குளிர் காலத்தில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சென்னையில் காற்றின் தரம் மோசமாக இருக்கும். அந்த வகையில் சென்னையில் காற்றின் தரக் குறியீடு அளவான பி.எம். 2.5, அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1.1 முதல் 3.1 மடங்கு அதிகரித்து வருகிறது.
தேசிய சுற்றுப்புற காற்றின் தரநிலை ஆய்வறிக்கையின்படி ஒரு கன மீட்டர் காற்றில் 60 மைக்ரோகிராமுக்கு அதிகமான PM 2.5 நுண்துகள் கொண்ட காற்று ஆரோக்கியம் மற்றதாக கருதப்படும் நிலையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் PM 2.5 நுண் துகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் சராசரியாக காற்று மாசு தர குறியீடு 111 ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொடுங்கையூரில் காற்றின் தரக்குறியீடு 136 ஆகவும் , மணலியில் 128 ஆகவும் , அரும்பாக்கத்தில் 124 ஆகவும் , வேளச்சேரியில் 108 ஆகவும் பதிவாகியுள்ளது . இதில் சற்று ஆறுதலாக காற்றின் மாசு ராயபுரம் பகுதியில் மட்டும் 50 ஆக இருந்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலையில் பனிமூட்டதோடு காற்று மாசும் நிலவுவதால் ஆஸ்துமா , நுரையீரல் பாதிப்பு , இருதய பாதிப்பு கொண்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு தொழில்நகரமான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு 219 ஆக பதிவானதால் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது , குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னையில் கொடுங்கையூர் , மணலி , ஆலந்தூர் , வேளச்சேரி , பாரிமுனை , ஸ்ரீபெரும்புதூர் , அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதிகளில் காற்றில் பி.எம்.2.5 அளவு மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர மாங்கனீஸ் 0.09 மைக்ரோகிராம் என்ற அளவில் சென்னையில் 20 இடங்களிலும், நிக்கல் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 0.0030 மைக்ரோகிராமும் நிர்ணயிக்கபட்ட அளவை காட்டிலும் அதிகரித்து காணப்படுகின்றன. சிலிக்கா அளவு அதிகமுள்ள பகுதிகளில் மக்களுக்கு நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகள், சில நேரங்களில் கடுமையான அல்லது ஆபத்தான நோய்களுக்கு ஆளாகும் சூழலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதியவர்கள் , இருதய பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் என பலருக்கும் உடலில் சுவாச, நோயெதிர்ப்பு மண்டலங்களைப் பாதிக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.