தங்க நகை கடனுக்கு செக் வைத்த ஆர்பிஐ.. வங்கிகள் எடுத்த முக்கிய முடிவு!
TV9 Tamil News December 22, 2025 03:48 PM

2025-ல் மட்டும் தங்கம் (Gold) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையில், மீண்டும் விலை குறைந்தது. தற்போது மேலும் உயர்வை நோக்கி தங்கம் சென்றுக்கொண்டு இருக்கிறது. தங்கம் விலை குறைந்தாலும், தங்கத்தை வாங்கி சேமிக்கும் ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் குறையாமல் உள்ளது. இந்த நிலையில் தான் தங்க நகை கடன் குறித்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) அறிவுரை வழங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல மடங்கு அதிகரித்த தங்க நகை கடன்கள்

தங்கத்தின் விலை (Gold Price) மிக கடுமையாக உயர்ந்துள்ள அதே சமயத்தில், தங்க நகை கடன்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, முன்பு வழங்கப்பட்டதை விடவும் தற்போது தங்கத்திற்கு அதிக பணம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது தங்க நகைகளை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெறுவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி இந்த முக்கிய முடிவை கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக குறைகளை தீர்க்க QR கோடு அறிமுகம் செய்த அரசு!

வங்கி, நிதி நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த ஆர்பிஐ

2024 ஏப்ரல் மாதத்தில் 1.01 லட்சம் கோடியாக இருந்த தங்க நகை கடன்களின் மதிப்பு, 2025 அக்டோபர் மாதத்தில் ரூ.3.37 லட்சம் கோடியாக அதிகரித்து இருந்தது. இவ்வாறு தங்க நகை கடன்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க : இரண்டு முக்கிய மாற்றங்களை கொண்டுவந்த EPFO.. இனி ஊழியர்களுக்கு இவற்றில் சிக்கல் இல்லை!

இது தொடர்பாக தனது உத்தரவில் கூறியுள்ள ஆர்பிஐ, தங்கம் விலை தொடர்ந்து அதிக ஏற்ற இறக்கத்தோடு இருப்பதை சுட்டி காட்டியுள்ளது. இதன் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்க நகை கடன் வழங்குவது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. முன்பு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்க நகை கடன்களுக்கு 70 முதல் 72 சதவீதம் வரை கடன் வழங்கி வந்த நிலையில், அதனை இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி வங்கிகள் வெறும் 60 முதல் 65 சதவீதம் வரை குறைத்துள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.