சென்னை, டிசம்பர் 23: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) டிசம்பர் 23, 2025 அன்று சென்னைக்கு வந்தார். தமிழக சட்டமன்ற தேரத்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக – அதிமுக தொகுதி பங்கீடு குறித்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவிருக்கும் பிற கட்சிகள் குறித்து முடிவெடுப்பதற்காக அவர் தமிழகம் வந்துள்ளார். அவருடன் துணை பொறுப்பாளர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
விஜய் ஒரு ஸ்பாயிலர் என சொன்ன பியூஷ் கோயல்?பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருடனான சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம், கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் குறித்தான பேச்சின் போது அவர் ஒரு ஸ்பாயிலர் என பியூஶ் கோயல் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்.. ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
இந்த பேச்சுவார்த்தையின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், துணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக கூட்டடணியில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம்?இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் இணைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்ட தொகுதிகளை விட, இந்த முறை இரட்டிப்பு தொகுதிகளை கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : சென்னையில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்.. அமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்க திட்டம்..
மேலும், 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெற்றியளிக்கக்கூடியதாக பாஜக அடையாளம் கண்டுள்ளதாகவும், சிறிய கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையும் சேர்த்து மொத்தமாக சுமார் 50 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், மதிமுக, பாமக, அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியை கூட்டணியில் இணைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரங்களை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களை பியூஷ் கோயல் நேரில் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.