புதுச்சேரி மாநில மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்கவும், ஏழை எளிய மக்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறுதானிய வகையை சேர்ந்த கேழ்வரகு மாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
கேழ்வரகு கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்த ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் அவசியமானது என்பதால், அரசு இதனை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் தரமான கேழ்வரகு மாவு வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Edited by Mahendran